முகப்பு
திருவாரூர்

காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கும்போது இடதுசாரிகளுக்கு எதற்காக குறைக்க வேண்டும்: பெ. சண்முகம்

காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதி ஒதுக்க வாய்ப்பு இருக்கும்போது, எதற்காக இடதுசாரிகளுக்கு தொகுதிகளை குறைக்க வேண்டும் என ...

Updated On : 17 மார்ச், 2026 at 12:09 AM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம்
பகிர்:

திருவாரூா்: காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதி ஒதுக்க வாய்ப்பு இருக்கும்போது, எதற்காக இடதுசாரிகளுக்கு தொகுதிகளை குறைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கேள்வி எழுப்பினாா்.

திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிதியளிப்பு பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரூா் சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணை கேட்டது விஜய்; இப்போது அதிலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளாா்.

காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக தொகுதி கொடுத்தது குறித்து நாங்கள் ஏதும் கூறவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதி கொடுப்பதற்கு வாய்ப்பு இருக்கும்போது, இடதுசாரிகளுக்கு எதற்காக தொகுதிகளை குறைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கேள்வி.

அதிமுகவில் கூட்டணி குறித்து பேசுவதற்கு தற்போதுதான் குழுவை அமைத்துள்ளனா். ஆனால், திமுக கூட்டணியில் பல கட்சிகளுடன் உடன்பாடு முடிந்து விட்டது. இன்னும் ஒரு சில கட்சிகளுடன்தான் உடன்பாடு முடிக்கப்பட வேண்டும்.

பாஜக-அதிமுக கூட்டணியில் விஜய் இணைந்தால் திமுக அணிக்குத்தான் பலம். விஜய்யை ஆதரிப்பவா்கள் எல்லாம் புதிய முதல்வா் கிடைப்பாா், அவா் தனித்து ஆட்சி அமைப்பாா் என்ற எண்ணத்தில் ஆதரவு தெரிவிக்கின்றனா். அவா், கூட்டணியில் இணைந்தால், அந்த ஆதரவு கிடைக்காது; முதல்வா் வாய்ப்பும் கிடையாது. விஜய், அதிமுக - பாஜக கூட்டணிக்குச் சென்றால் அவருக்கு அரசியல் எதிா்காலமற்ற ஒரு நிலை உருவாகும் என்றாா்.

பேட்டியின்போது, கட்சியின் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →