இது தவெக அரசின் துணிச்சலான நடவடிக்கை! முதல்வர் விஜய்யுடன் பேசியது பற்றி பெ. சண்முகம் பேட்டி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேட்டி
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இன்று (புதன்கிழமை) சந்தித்துப் பேசினார்.
முதல்வரிடம் வைத்த கோரிக்கைகள் பற்றி செய்தியாளர்களுடன் பெ. சண்முகம் கூறியதாவது:
"கரூர் மாவட்டத்தில் 4 கிராமங்களில் உள்ள இனாம் நிலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தவெக அரசு கடந்த ஜூலை 9 அன்று உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு எங்கள் கட்சி சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு முழுவதுடன் இதுபோல இனாம் நிலங்களுக்குத் தடைகள் உள்ளன. இதனால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இதனைச் சரிசெய்ய ஒரு ஆணையத்தை அமைக்க வேண்டும்.
களக்காடு - முண்டந்துறை, மேகமலை புலிகள் சரணாலயம் பகுதிகளில் உள்ள கிராம மக்களை ஆக. 28 ஆம் தேதிக்குள் வெளியேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த மே 29 அன்று மோசமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வன உரிமைச் சட்டம் 2006 என்பது இன்னும் அமல்படுத்தவில்லை. இதுவரை 20 ஆண்டுகளில் 35,000 குடும்பங்களுக்குதான் பட்டா வழங்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக ஆட்சியில் இருந்தபோது முன்னாள் முதல்வர்களிடம் இதுபற்றி வலியுறுத்தியிருக்கிறேன்.
தேனி மாவட்டத்தில் 98 கிராம மக்களை அகற்ற உத்தரவிட்டுள்ளதால் மிகப்பெரிய பதற்றம் நீடிக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்து உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும். வன உரிமைச் சட்டம் 2006 - முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு கிராமத்திற்கு 'பறைச்சேரி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதனை 'வடக்குஅச்சம்தவிழ்த்தான்' என்று மாற்ற வேண்டும் என அந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கிராமத்தில் இதுபற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தும் இன்னும் நடவடிக்கை இல்லை. அதுபற்றி முதல்வரிடம் கூறியிருக்கிறோம்.
சேலம் மாவட்டத்தில் தண்ணீர் விநியோகிப்பது தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்ட முடிவையும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளேன்" என்றார்.
P. Shanmugam speaks about his conversation with Chief Minister Vijay
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.