எஸ்டிஎம்சியில் கொசுக்களால் பரவும் நோய்களை தடுக்கும் பணிகள் தீவிரம்
தெற்கு தில்லி மாநகராட்சிப் பகுதியில் (எஸ்டிஎம்சி) மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கும்
தெற்கு தில்லி மாநகராட்சிப் பகுதியில் (எஸ்டிஎம்சி) மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அம்மாநகராட்சியின் ஆணையர் புனீத் குமார் கோயல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் புதன்கிழமை அவர் கூறியதாவது:
கடந்த ஜூலை மாதம் தொடக்கம் தில்லியில் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா ஆகிய கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த நோய்களைத் தடுக்கும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் மெத்தனமாக உள்ளது கவலையளிக்கிறது. பல அரசு அலுவலகங்களில் கொசுப் பெருக்கும் இருக்கும் வகையில் நீர் தேங்கியுள்ளது. இது தொடர்பாக கவனம் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறையினரைக் கேட்டுக் கொண்டுள்ளேன். இதேபோல தில்லியில் உள்ள பள்ளிகளிலும் கொசுப் பெருக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து கவனத்தில் கொள்ளுமாறு பள்ளிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் குடியிருப்புகளில் உள்ள தண்ணீர் சேமிக்கும் தொட்டிகளில் கொசுப் பெருக்கம் இல்லாமல் இருப்பதை அந்தந்தக் குடியிருப்பு நலச் சங்கங்கள் உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். கை, கால்களை முழுவதுமாக மறைக்கும் வகையில் ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
பயன்பாடின்றி இருக்கும் கூலர்களில் உள்ள தண்ணீரை அகற்ற வேண்டும். தண்ணீரை அகற்ற முடியாத கூலர்களில் ஒரு தேக்கரண்டியளவு மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் ஊற்றி வைத்தால் கொசுப் பெருக்கம் இருக்காது என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.