சிமி அமைப்பினர் என்கவுன்ட்டர் வழக்கு: விசாரணை அறிக்கையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு சிறையில் இருந்து தப்பிய சிமி (இந்திய இஸ்ஸாமிய மாணவர் இயக்கம்) பயங்கரவாத அமைப்பினர்
மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு சிறையில் இருந்து தப்பிய சிமி (இந்திய இஸ்ஸாமிய மாணவர் இயக்கம்) பயங்கரவாத அமைப்பினர் 8 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்த 8 பயங்கரவாதிகளும் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள மத்திய சிறையில் காவலரைக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இவர்கள் அனைவரும் பல்வேறு குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புடையவர்கள். அவர்கள் தப்பியோடிய அடுத்த நாளே போபால் அருகே பதுங்கி இருந்த இடத்தை போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது நிகழ்ந்த மோதலில் 8 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், இந்த என்கவுன்ட்டர் போலியானது என்றும், இது தொடர்பான விடியோக்களில் நம்பகத்தன்மை இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழுவை மத்தியப் பிரதேச அரசு அமைத்தது. இந்தக் குழு, போலீஸார் மீது எவ்விதத் தவறும் இல்லை என்று அறிக்கை அளித்தது. இந்நிலையில் இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக சுதந்திரமான முறையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
இந்த என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் அறிக்கை ஏற்கெனவே வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விஷயத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை. எனவே, இந்த விசாரணை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.