அரசியல் உள்நோக்கம் கொண்டது: ஆம் ஆத்மி
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை பதிவு செய்யும்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை பதிவு செய்யும் முயற்சி தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி பொய்யானது; அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் செளரவ் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தில்லி தலைமைச் செயலரை தாக்கியதாகக் கூறப்படும் பொய்யான சம்பவத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி ஜோடிக்கப்பட்டதாகும். முதல்வர் இல்லத்தில் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி அதுபோன்ற சம்பவமே நடைபெறவில்லை என்பதை ஆம் ஆத்மி கட்சி தெளிவுப்படுத்துகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தில்லி காவல்துறை கடந்த 4 மாதங்களாக பொய்யான கட்டுக் கதைகளை கசிய விடுகிறது. உண்மையிலேயே தலைமைச் செயலர் தாக்கப்பட்டிருந்தால் அவர் எப்படி சாதாரணமாக நடந்து செல்வதை சிசிடிவி பதிவில் காண முடிந்தது என்ற எளிமையான கேள்விக்குப் பதில் இல்லை.
இந்த விவகாரத்துக்குப் பின்னணியில் தில்லி முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு அவப்பெயரை உருவாக்குவதும், தில்லி அரசை கவிழ்க்கவும் சதி தீட்டப்பட்டது தெளிவாகிறது.
இந்த விவகாரம் நடைபெற்ற நாளில், முதல்வர் இல்லத்திலிருந்து தலைமைச் செயலர் நேராக துணைநிலை ஆளுநர் இல்லத்துக்குச் சென்றுள்ளார். துணைநிலை ஆளுநரும் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலருக்காக காத்திருந்துள்ளார். இதைத் தொடர்ந்துதான் இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டு, முதல்வர், துணைமுதல்வர், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு எதிராக பொய்யான வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தில்லி அரசுக்கு எதிராக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் வாக்கு மூலம் அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இத்தகவல் உண்மையென்றால் அரசியல் பகடைக்காயாக அதிகார வர்க்கம் பயன்படுத்தப்பட்டது இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக இருக்கும். இந்த அதிகாரிகள்தான், ஐஏஎஸ் அதிகாரிகளின் சட்டவிரோதமான வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் 1975-ஆம் ஆண்டு அவசரகால நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் தள்ளப்பட்டதை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால், உண்மையிலேயே இந்திரா காந்தியின் காலடித் தடத்தையே மோடியும் பின்பற்றி வருகிறார்.
இதுபோன்ற அடக்குமுறையைக் கண்டு ஆம் ஆத்மி கட்சி அஞ்சாது. மத்திய அரசின் முதுகெலும்பு இல்லாத அரசியல் கையாளாக தில்லி காவல்துறை மாறியுள்ளது. தில்லி காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் அதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சட்டரீதியாக நீதிமன்றத்தில் சந்திக்கும் என்றார் செளரவ் பரத்வாஜ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.