148 ஏக்கர் ஆக்கிரமிப்பு வன நிலம் மீட்பு: உச்ச நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல்
தில்லியில் ஆக்கிரமிப்பில் இருந்த 148 ஏக்கர் வனநிலம் மிட்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தில்லி அரசு தெரிவித்தது.
தில்லியில் ஆக்கிரமிப்பில் இருந்த 148 ஏக்கர் வனநிலம் மிட்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தில்லி அரசு தெரிவித்தது. தில்லி அங்கீகாரம் இல்லாத கட்டடங்களை அகற்ற "சீலிங்' நடவடிக்கையை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைக் கண்காணிக்க தனியாக குழு ஒன்றையும் அமைத்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது தில்லியில் ஆக்கிரமிப்பில் உள்ள நீர் நிலைகள், வன நிலங்கள், சாலைகள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி, இதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய தில்லி அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அப்போது, தில்லியில் சுமார் 2,280 கி.மீ. தூர சாலைகள், தெருக்கள், நடைபாதைகள் ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதைக் குறிப்பிட்டு கவலை தெரிவித்த நீதிபதிகள், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முந்தைய விசாரணையின்போது உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தல்லி அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "தில்லியில் ஆக்கிரமிப்பில் இருந்து 148 ஏக்கர் வன நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும்' என்றார்.
இதையடுத்து, தில்லி அரசு அறிக்கை தாக்கல் செய்ய இரண்டு வாரம் அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.