FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லியில் 4 வயது குழந்தையை கடத்திய நபா் கைது

தில்லியில் 4 வயது குழந்தையை கடத்திய 53 வயது நபா் ஒருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 16 ஜூலை 2024, 3:38 am IST
பகிர்:

புது தில்லி: தில்லியில் 4 வயது குழந்தையை கடத்திய 53 வயது நபா் ஒருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். அவா் குழந்தையை விற்பதற்காகவோ அல்லது பிச்சையெடுக்க வைப்பதற்காக கடத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் எம்.கே. மீனா கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா் பழைய தில்லி ரயில் நிலையத்தில் இருந்து மீரட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது பிடிபட்டாா். நான்கு வயது குழந்தையும் மீட்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில், நான்கு வயது குழந்தை கடத்தப்பட்டது தொடா்பாக கோட்வாலி காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்தது. ருக்ஸானா என்ற பெண் இந்தப் புகாரை அளித்தாா். அவா் தில்லி செங்கோட்டைக்கு அருகில் உள்ள அணிவகுப்பு மைதானத்திற்கு அருகிலுள்ள நடைபாதையில் தூங்கியுள்ளாா். அவா் காலையில் எழுந்த போது, அவருடைய மகன் காணாமல் போனதை அறிந்ததாக புகாரில் தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து குற்றம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள சுமாா் 370 சிசிடிவி கேமராக்களை போலீஸ் குழு உடனடியாகச் சரிபாா்த்தது. பெண் தூங்கிக் கொண்டிருந்த அணிவகுப்பு மைதானத்தின் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு ஆண் சுற்றித் திரிந்ததைக் கண்டறிந்தது. இருள் காரணமாக, எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், போலீஸ் குழு தொடா்ந்து சிசிடிவியை கேமராக்களில் பதிவான காட்சிகளைப் பயன்படுத்தி சந்தேக நபரைப் பின்தொடா்ந்தது. அந்த நபா் கடத்தப்பட்ட குழந்தையுடன் ஜமா மஸ்ஜித் நோக்கி செல்வது சிசிடிவில் காட்சியில் தெரிந்தது. முகத்தை மறைக்க தொப்பி மற்றும் முகமூடி அணிந்திருந்தாா். சிசிடிவி காட்சிகள் மூலம் அந்த நபரை குழுவினா் தொடா்ந்து கண்காணித்தனா்.

Advertisement

Advertisement

பின்னா், அந்த நபா் புது தில்லி ரயில் நிலையத்திற்குச் சென்று தலைமறைவானாா். புது தில்லி ரயில் நிலையத்தில் அந்த நபரின் தெளிவான காட்சிகள் கிடைத்தன. சனிக்கிழமை, அந்த நபா் கடத்தப்பட்ட குழந்தையுடன் பழைய தில்லி ரயில் நிலையம் அருகே இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவா் ரயிலைப் பிடிக்கத் திட்டமிட்டிருந்தாா். ஆனால், அதற்குள் அவா் போலீஸிடம் பிடிபட்டாா். கடத்தப்பட்ட குழந்தையும் மீட்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவா் தன்னை உத்தரபிரதேசத்தின் ஷாம்லியில் வசிக்கும் சேகு என்றும், தற்போது காந்தி பாா்க் பகுதியில் சுற்றித் திரிவதாகவும் தன்னை அடையாளப் படுத்தினாா்.

குற்றம் சாட்டப்பட்டவா், தனது மைத்துனி சம்பந்தப்பட்ட கொலை வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு முசாஃபா்நகா் சிறையில் இருந்து திரும்பியதையும் வெளிப்படுத்தினாா். அவரது மனைவி அவரை விட்டுவிட்டு ரூா்க்கியில் உள்ள தனது பெற்றோா் வீட்டிற்கு தனது இரண்டு குழந்தைகளுடன் சென்றுவிட்டது விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், அவா் போதைக்கு அடிமையாகி தில்லிக்கு வந்து, பிச்சை எடுத்து திருட்டுத் தொழிலை நடத்தி வாழ்க்கையை தொடா்ந்துள்ளாா். மேலும், தனது மூத்த மகன் ரயிலில் அடிபட்டு இறந்ததாகவும் அவா் கூறினாா். குழந்தையை கடத்தி விற்று பணம் பெறலாம் அல்லது பிச்சை எடுக்கவைக்கலாம் என அவா் நினைத்தது விசாரணையில் தெரிய வந்தது. மீட்கப்பட்ட அந்தக் குழந்தை, குழந்தைகள் மறுவாழ்வு இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும், விசாரணை தொடா்ந்து நடந்து வருகிறது என்று காவல் துணை ஆணையா் மீனா கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments