அடல் கேண்டீனில் ரூ. 5 -க்கு உணவு! தில்லி முதல்வர் அறிவிப்பு
தில்லி அரசு அறிவித்துள்ள அடல் கேண்டீன் பற்றி...
தில்லியில் அடல் கேண்டீன் தொடங்கப்படவுள்ளதாக முதல்வர் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்முறையாக தேசியக் கொடியேற்றிய முதல்வர் ரேகா குப்தா, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது, குடிசைப் பகுதிகளில் வாழும் மக்கள் பயன்பெறும் விதமாக ரூ. 5 -க்கு சத்தான உணவை வழங்கும் அடல் கேண்டீன் திட்டத்தை வருகின்ற டிசம்பர் மாதம் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாள் அன்று தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
Advertisement
ஏற்கெனவே, இந்த திட்டத்துக்காக தில்லி பட்ஜெட்டில் 100 அடல் கேண்டீன்களை தொடங்குவதற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த திட்டம் தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய அம்மா உணவகத்தை முன்னுதாரணமாகக் கொண்டது.
தமிழகத்தில் அம்மா உணவகத்தை தொடங்கிய ஜெயலலிதா, ஒரு இட்லி 1 ரூபாய், சாம்பார் சாதம் ரூ. 5, தயிர் சாதம் ரூ. 3 -க்கு வழங்கினார்.
தமிழக அரசின் இந்த திட்டத்தை முன்னுதாரணமாக கொண்டு பல்வேறு மாநிலங்கள் அறிமுகம் செய்திருக்கின்றன. ஏற்கெனவே ஆந்திரத்தில் ரூ. 5 -க்கு உணவு வழங்கும் அண்ணா கேண்டீன் திறக்கப்பட்டது. கர்நாடகத்தில் ரூ. 5 -க்கு காலை உணவு, ரூ. 10 -க்கு மதிய முழுச் சாப்பாடு வழங்கப்பட்டு வருகின்றது.