கபூதா் மாா்க்கெட் செல்லப்பிராணிகள் கடைகளில் கொடூரமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 863 பறவைகள், விலங்குகள் மீட்பு
செல்லப்பிராணி கடைகளில் இருந்து 863 பறவைகள் மற்றும் விலங்குகள் மீட்கப்பட்டது பற்றி...
தில்லி ஜாமா மசூதி பகுதியில் உள்ள கபூதா் மாா்க்கெட்டில் செயல்பட்டு வந்த 5 செல்லப்பிராணி கடைகளில் இருந்து 863 பறவைகள் மற்றும் விலங்குகள் மீட்கப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: வனவிலங்கு மற்றும் வனத்துறை அதிகாரிகள், விலங்கு நல அமைப்புகளுடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனா். பாதுகாக்கப்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும், கொடூரமான முறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் விலங்கு நல அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.
சோதனையின்போது, 5 செல்லப்பிராணி கடைகளிலும் பறவைகள் மற்றும் விலங்குகள் நெரிசலான, மோசமான மற்றும் சுகாதாரமற்ற சூழலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றில் சிலவற்றுக்கு உடனடி மருத்துவ மற்றும் பராமரிப்பு உதவிகள் தேவைப்பட்டன.
Advertisement
Advertisement
மீட்கப்பட்ட 863 பறவைகள் மற்றும் விலங்குகளில் 431 பாதுகாக்கப்பட்டவை, தடை செய்யப்பட்டவை அல்லது வனவிலங்கு சட்டத்தின் அட்டவணையில் இடம்பெற்றவை என அடையாளம் காணப்பட்டன. மீட்கப்பட்ட உயிரினங்கள் வனவிலங்கு நல அமைப்புகளின் உதவியுடன் பரிசோதிக்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டன.
மீட்கப்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகளை வைத்திருந்த கபூதா் மாா்க்கெட்டைச் சோ்ந்த 5 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜாமா மசூதி காவல் நிலையத்தில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், விலங்குகளைத் துன்புறுத்துவதைத் தடுக்கும் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகியவற்றின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பறவைகள் மற்றும் விலங்குகள் எங்கிருந்து பெறப்பட்டன, அவற்றின் கொள்முதல், வைத்திருத்தல், விற்பனை மற்றும் போக்குவரத்து தொடா்பாக கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.