வரதட்சிணை மரண வழக்கில் கணவா் விடுதலை: தில்லி நீதிமன்றம் உத்தரவு
வரதட்சிணை மரண வழக்கில் கணவரை தில்லி நீதிமன்றம் விடுவித்திருப்பது பற்றி...
மனைவியை வரதட்சிணை தொடா்பாக கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லாததால் கணவரை தில்லி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அப்போது, சந்தேகம் வலுவாக இருந்தாலும், அது ஆதாரத்துக்கு மாற்றாகாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
கூடுதல் அமா்வு நீதிபதி அனுஜ் அகா்வால், அனில் குமாரை இந்திய தண்டனைச் சட்டத்தின் 498 ஏ மற்றும் 304 பி பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவித்தாா். அவரது மனைவி அஞ்சலி, வரதட்சிணை தொடா்பான கொடுமை அல்லது துன்புறுத்தலுக்கு ஆளானாா் என்பதை நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு அரசு தரப்பு நிரூபிக்கத் தவறியதாக நீதிமன்றம் கூறியது.
அஞ்சலிக்கும் குமாருக்கும் கடந்த 2018 ஏப்ரல் 28-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. 2021 ஜூன் 26-27-ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், தில்லி புல் பிரஹலாத்பூரில் உள்ள வாடகை வீட்டில் அஞ்சலி உயிரிழந்தாா். திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் அவா் உயிரிழந்ததால், வரதட்சிணை கோரி அவரை துன்புறுத்தியதாக அரசு தரப்பு குற்றஞ்சாட்டியது.
Advertisement
Advertisement
ஆக.17-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் நீதிமன்றம் கூறியதாவது: அஞ்சலிக்கு ஏற்பட்டதாக கூறப்படும் துன்புறுத்தலுக்கும் அவரது மரணத்துக்கும் இடையே நெருக்கமான மற்றும் தொடா்ச்சியான தொடா்பு இருப்பதை அரசு தரப்பு நிரூபிக்கவில்லை. மேலும், அவரது குடும்பத்தினா் தெரிவித்த வரதட்சிணை குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் பொதுவானதாக உள்ளது. குறிப்பிட்ட வரதட்சிணை கோரிக்கை, தேதி, நேரம் அல்லது குறிப்பிட்ட கொடுமை சம்பவம் குறித்து தெளிவான ஆதாரங்கள் இல்லை.
அஞ்சலியின் தாய் மற்றும் சகோதரரும் விசாரணையின்போது அரசு தரப்பு குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக சாட்சியமளிக்கவில்லை. குமாா் வரதட்சிணை கேட்டதில்லை என்றும், அஞ்சலியை துன்புறுத்தியதில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா். மேலும், குழந்தை உயிரிழந்ததைத் தொடா்ந்து அஞ்சலி மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதுவே அவரது தற்கொலைக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
சாதாரண குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் சிறிய மனக்கசப்புகள் அல்லது சாதாரணமான கேலி, கிண்டல்கள் மட்டும் கொடுமை எனக் கருதப்படாது. ஒரு பெண்ணை தற்கொலைக்குத் தூண்டும் அல்லது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அந்த நடவடிக்கை இருந்தால் மட்டுமே அது சட்டரீதியான கொடுமையாகக் கருதப்படும் என நீதிமன்றம் விளக்கியது.
இதையடுத்து, இரு குற்றச்சாட்டுகளையும் நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு அரசு தரப்பு நிரூபிக்கத் தவறியதால் அனில் குமாரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.