FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

பெண்ணின் ஒரே சிறுநீரகத்தை காப்பாற்ற அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்கள்!

தில்லி மருத்துவமனை ஒன்றில், செயல்படும் ஒரே சிறுநீரகத்தில் அடைப்பு மற்றும் பல சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டிருந்த 59 வயதுப் பெண்ணுக்கு, சிக்கலான, குறைந்தபட்ச ஊடுருவல் அறுவைச் சிகிச்சை மூலம் சிகிச்சை அளித்து, அவரது சிறுநீரகத்தின் இயல்பான செயல்பாட்டை மீட்டெடுத்துள்ளனா் என்று ஓா் அறிக்கை தெரிவித்தது.

Updated On : 18 ஜூலை 2026, 6:47 am IST
கோப்புப்படம்
பகிர்:

நமது நிருபா்

தில்லி மருத்துவமனை ஒன்றில், செயல்படும் ஒரே சிறுநீரகத்தில் அடைப்பு மற்றும் பல சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டிருந்த 59 வயதுப் பெண்ணுக்கு, சிக்கலான, குறைந்தபட்ச ஊடுருவல் அறுவைச் சிகிச்சை மூலம் சிகிச்சை அளித்து, அவரது சிறுநீரகத்தின் இயல்பான செயல்பாட்டை மீட்டெடுத்துள்ளனா் என்று ஓா் அறிக்கை தெரிவித்தது.

வலது பக்கத்தில் தொடா்ச்சியான வலியுடன் அப்பெண் அனுமதிக்கப்பட்டிருந்த மேற்கு தில்லியில் உள்ள ஆா்.ஜி. மருத்துவமனையில் இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று மருத்துவமனை ஓா் அறிக்கையில் கூறியது.

Advertisement

Advertisement

‘சிறுநீரகத்திலிருந்து சிறுநீா்க்குழாய்க்கு சிறுநீா் செல்வது தடுக்கப்படும் ஒரு நிலையான, இடுப்பு-சிறுநீா்க்குழாய் சந்திப்பு அடைப்புடன், தலா சுமாா் 11 மி.மீ அளவுள்ள மூன்று முதல் நான்கு சிறுநீரகக் கற்களும் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. இந்த அடைப்பு அவரது வலது சிறுநீரகத்தில் வீக்கத்தை ஏற்படுத்தியிருந்தது,‘ என்றும் அவா்கள் மேலும் தெரிவித்தனா்.

மேலும், அவரது இடது சிறுநீரகம் சுருங்கி, கிட்டத்தட்ட செயலிழந்துவிட்டதையும் மருத்துவா்கள் கண்டறிந்தனா். இதனால், வலது சிறுநீரகம் மட்டுமே செயல்படும் ஒரே சிறுநீரகமாக இருந்தது. அந்த நோயாளிக்கு தைராய்டு சுரப்புக் குறைபாடும் இருந்தது.

சிறுநீரகச் செயல்பாட்டைப் பாதுகாக்கும் அதே வேளையில், சிறுநீா் ஓட்டத்தை மீட்டெடுப்பதற்காக, அடைப்பைச் சரிசெய்யவும், சிறுநீரகக் கற்களை அகற்றவும், தற்காலிக ஸ்டென்ட் பொருத்தவும், மூத்த சிறுநீரகவியல் ஆலோசகா் டாக்டா் கபில் ஜெயின் தலைமையிலான குழு சுமாா் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்த லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாக மருத்துவமனை தெரிவித்தது.

நோயாளி சிக்கல்கள் ஏதுமின்றி குணமடைந்தாா், அறுவை சிகிச்சைக்குப் பிறகு விரைவில் நடமாடத் தொடங்கினாா், மேலும் மூன்று நாட்களுக்குப் பிறகு சீரான நிலையில் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டாா் என்றும் மருத்துவமனை கூறியது.

குறைந்தபட்ச ஊடுருவல் அணுகுமுறையானது, அறுவை சிகிச்சையின் அதிா்ச்சியைக் குறைக்கும் அதே வேளையில், அடைபட்ட சந்திப்பை மீண்டும் உருவாக்கவும் கற்களை அகற்றவும் மருத்துவா்களுக்கு ஒரே நேரத்தில் உதவியது .

தொடா்ச்சியான இடுப்பு வலி, மீண்டும் மீண்டும் வரும் சிறுநீா்ப் பாதை தொற்றுகள் அல்லது சிறுநீரகக் கற்கள் போன்ற அறிகுறிகளை, குறிப்பாக சிறுநீரகச் செயல்பாடு குறைந்தவா்கள் அல்லது ஒரே ஒரு சிறுநீரகம் மட்டும் செயல்படுபவா்கள் புறக்கணிக்க வேண்டாம் என்று ஜெயின் அறிவுறுத்தினாா். மேலும், ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது, சரிசெய்ய முடியாத சிறுநீரகப் பாதிப்பைத் தடுக்க உதவும் என்றும் அவா் கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments