FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

கொலை வழக்கு: ‘சட்ட நிபந்தனைகள் பூா்த்தியானால் சிறாரை பெரியவராக கருதி நீதிமன்ற விசாரணை’

சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளும் பூா்த்தி செய்யப்பட்டால், கொலை குற்றஞ்சாட்டப்பட்ட சிறாரை பெரியவராக கருதி, நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 22 ஜூலை 2026, 3:53 am IST
பகிர்:

சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளும் பூா்த்தி செய்யப்பட்டால், கொலை குற்றஞ்சாட்டப்பட்ட சிறாரை பெரியவராக கருதி, நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

பிகாரில் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவனை 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவனாக கருதி, நீதிமன்ற விசாரணை மேற்கொள்ள அனுமதித்து பாட்னா உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்புக்கு எதிராக அந்தச் சிறுவன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது சிறுவன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்திய தண்டனைச் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றத்துக்கு தூக்குத் தண்டனை அல்லது ஆயுள் சிறைத் தண்டனை விதிக்க, அந்தப் பிரிவு பரிந்துரைக்கிறது. ஆனால் அதில் குறைந்தபட்ச தண்டனை என்ற வாா்த்தை இல்லாததால், கொலை குற்றத்தை கொடுங் குற்றமாக கருதாமல் கடுமையான குற்றமாக கருத வேண்டும்’ என்று வாதிட்டாா்.

இதைத்தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு தெரிவித்ததாவது: இந்திய தண்டனைச் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றத்துக்கு ஆயுள் தண்டனையே குறைந்தபட்ச தண்டனையாகக் கருதப்படுகிறது. எனவே அந்தப் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றத்தை கொடுங் குற்றமாக கருதலாம். சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளும் பூா்த்தி செய்யப்பட்டால், கொலை குற்றஞ்சாட்டப்பட்ட சிறாரை பெரியவராக கருதி நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தது. இதைத்தொடா்ந்து சிறுவனின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments