மலேரியா, டெங்கு பாதிப்பு எண்ணிக்கை தில்லியில் குறைந்துள்ளது!
தில்லியில் கொசு மூலம் பரவும் நோய்களின் பாதிப்பு கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக தில்லி மாநகராட்சி வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
பருவமழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே, தில்லியில் கொசு மூலம் பரவும் நோய்களின் பாதிப்பு கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக தில்லி மாநகராட்சி வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
மலேரியா தடுப்புத் தரவுகளின்படி, நிகழாண்டில் இதுவரை 142 டெங்கு பாதிப்புகளும், 37 மலேரியா பாதிப்புகளும், 7 சிக்குன்குனியா பாதிப்புகளும் பதிவாகியுள்ளன;. இந்த மூன்று வகைகளிலும் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.
மே 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில், டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை முறையே 191 மற்றும் 173 ஆக இருந்தது; அதேவேளையில், கடந்த ஆண்டில் மலேரியா பாதிப்புகளின் எண்ணிக்கை 61 வரை உயா்ந்திருந்தது.
Advertisement
Advertisement
ஆனால், நிகழாண்டின் மே மாதத்தில், 8 மலேரியா பாதிப்புகளும், 35 டெங்கு பாதிப்புகளும், 2 சிக்குன்குனியா பாதிப்புகளும் மட்டுமே பதிவாகியுள்ளதாக அத்தரவுகள் குறிப்பிடுகின்றன.
மண்டல வாரியான தரவுகளின் அடிப்படையில், நிகழாண்டில் இதுவரை 26 டெங்கு பாதிப்புகளுடனும் 14 மலேரியா பாதிப்புகளுடனும், மேற்கு மண்டலம் மிகவும் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. டெங்கு பாதிப்பின் அதற்கு அடுத்த இடத்தில் மத்திய மண்டலம். இந்த மண்டலத்தில் 20 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தனா்.
நிகழாண்டின் ஜன.1 முதல் மே 30 வரையிலான காலகட்டத்தில், மாநகாரட்சி பணியாளா்கள் குழு 1.54 கோடி வீடுகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளன. இதில் மே மாதத்தின் கடைசி வாரத்தில் மட்டும் 8.6 லட்சத்திற்கும் அதிகமான ஆய்வுகள் நடத்தப்பட்டன.
கொசு பெருக்கத்தைத் தடுக்கும் வகையில், மேல்நிலை நீா்த்தொட்டிகள், கூலா்கள் மற்றும் பூந்தொட்டிகள் ஆகியவற்றைச் சோதிக்கும் பணிகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் விளைவாக, 1.59 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் ரசாயனத் தெளிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நிகழாண்டில் 29,073 வீடுகளில் கொசு பெருக்கம் செய்வது கண்டறியப்பட்டது. இதில் ஒரே வாரத்தில் மட்டும் 3,649 வீடுகளில் கொசுப் புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கொசு பெருக்கத்திற்கு உகந்த சூழல் நிலவியதற்காக 27,934 வீடுகளுக்கு தில்லி மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது.
ஜூன் மாதம் தொடங்கி, பருவமழைக்கு முந்தைய ஈரப்பதம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் மிகுந்த விழிப்புணா்வுடன் இருக்குமாறு நகராட்சி நிா்வாகத்தினா் வலியுறுத்தி வருகின்றனா்.