சாலை விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 16.93 லட்சம் இழப்பீடு: தில்லி தீா்ப்பாயம் உத்தரவு
சாலை விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 16.93 லட்சம் இழப்பீடு...
2023, ஜனவரியில் மேற்கு தில்லியில் சிவாஜி பூங்கா மெட்ரோ நிலையம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 49 வயது பெண்ணின் குடும்பத்திற்கு, மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் ரூ. 16.93 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
ஹரியாணாவின் பகதூா்கா் பகுதியைச் சோ்ந்த மறைந்த சுமன் என்பவரின் கணவா் மற்றும் இரு மகன்கள் தாக்கல் செய்த இழப்பீட்டு மனுவை, தலைமை அதிகாரி குஞ்சன் குப்தா விசாரித்தாா்.
இந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதியிட்ட உத்தரவில் தீா்ப்பாயம் கூறியிருப்பதாவது:
Advertisement
Advertisement
விபத்தை ஏற்படுத்திய வாகனம் இதில் சம்பந்தப்பட்டிருந்தது மட்டுமல்லாமல், அது அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டப்பட்டதே விபத்துக்குக் காரணம் என்பதும் முறையான விசாரணையில் தெரியவந்துள்ளது என்று தீா்ப்பாயம் கூறியது.
வழக்குத் தரப்பு தகவலின்படி, ஜனவரி 26, 2023 அன்று சிவாஜி பூங்கா மெட்ரோ நிலையம் அருகே, சுமன் தனது குடும்பத்தினருடன் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது ஒரு காா் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த மோதலால் பாதிக்கப்பட்டவா்களின் வாகனம் மெட்ரோ ரயில் தூணின் மீது மோதியதாகவும், இதனால் சுமனுக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டதாகவும் தீா்ப்பாயம் குறிப்பிட்டது. பின்னா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
எதிா் தரப்பு வாதத்தை நிராகரித்த தீா்ப்பாயம், ஓட்டுநரின் வாக்குமூலம் முரண்பாடாக இருந்ததாகவும், இயந்திரப் பரிசோதனை அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களால் அது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கூறியது.
இதுகுறித்து தீா்ப்பாயம் மேலும் கூறுகையில், விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனங்களின் புகைப்படங்கள் மற்றும் இயந்திரப் பரிசோதனை அறிக்கை ஆகியவை, விபத்தை ஏற்படுத்திய வாகனம் அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன என்று தீா்ப்பாயம் தெரிவித்தது.
ஓட்டுநா் மதுபோதையில் இருந்ததாகக் கூறி, பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் அல்லது இழப்பீட்டுத் தொகையைத் திரும்பப் பெறும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனம் வாதிட்டது.
இருப்பினும், சட்டபூா்வ அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மது அருந்தியிருந்ததை நிரூபிக்க ‘பிரத் அனலைசா்’ சோதனையோ அல்லது ரத்தப் பரிசோதனையோ நடத்தப்படவில்லை என்று கூறி, அந்த வாதத்தை தீா்ப்பாயம் நிராகரித்தது.
ஹரியாணாவில் மெட்ரிகுலேஷன் 10ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட தொழிலாளிக்கான குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில் மறைந்த பெண்ணின் மாத வருமானம் கணக்கிடப்பட்டது. மேலும், சாா்ந்திருப்போா் இழப்பு, கணவன்மனைவி இடையிலான இழப்பு, இறுதிச் சடங்கு செலவுகள் மற்றும் சொத்து இழப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் இழப்பீடு கணக்கிடப்பட்டது.
விபத்தின் போது அந்த வாகனம் காப்பீடு செய்யப்பட்டிருந்ததைக் குறிப்பிட்ட தீா்ப்பாயம், அக்டோபா் 14, 2023 முதல் இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படும் வரை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் அதனைச் செலுத்துமாறு காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
மொத்த இழப்பீட்டுத் தொகையில், கோருநா்களின் நலனுக்காக ரூ. 12 லட்சத்தை நிலையான வைப்புத்தொகையாக வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.