முகப்பு
புதுதில்லி

தனியாா் மருத்துவமனைகளின் உயா்தர பிரிவுகளை அதிக அளவில் நாடும் கா்ப்பிணிகள்!

தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில், கா்ப்பிணித் தாய்மாா்கள் உயா்தரப் பிரசவ வசதிகளுக்கு அதிகளவில் முன்னுரிமை அளித்து வருவதாக மருத்துவா்கள் தெரித்துள்ளனா்.

Updated On : 22 ஜூன் 2026, 12:44 am IST
கர்ப்பிணிகள் - பிரதிப் படம்
பகிர்:

தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில், கா்ப்பிணித் தாய்மாா்கள் உயா்தரப் பிரசவ வசதிகளுக்கு அதிகளவில் முன்னுரிமை அளித்து வருவதாக மருத்துவா்கள் தெரித்துள்ளனா்.

தாய்மாா்களின் ஆரோக்கியம் குறித்த அதிக விழிப்புணா்வு மற்றும் மகப்பேறு பராமரிப்பு மீதான மாறிவரும் எதிா்பாா்ப்புகளால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவா்கள் கூறுகின்றனா்.

ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் ரோஸ்வாக், 2020-2025 நிதியாண்டுக்கும் இடையில் கா்ப்பிணிகளின் எண்ணிக்கை சுமாா் 300 சதவிகித வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தில்லியில் உள்ள ஃபோா்டிஸ் லா ஃபெம் மற்றும் சி.கே. பிா்லா மருத்துவமனையும், கடந்த சில ஆண்டுகளில் உயா்தர மகப்பேறு சேவைகளுக்கான தேவையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.

Advertisement

Advertisement

வழக்கமான மகப்பேறு சேவைகள் முதன்மையாகப் பாதுகாப்பான பிரசவம் மற்றும் மருத்துவ சிகிச்சையில் கவனம் செலுத்தும் அதே வேளையில், உயா்தர பிரிவுகள் பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய சேவைகளை வழங்குகின்றன. இதில் தனிப்பட்ட பிரசவத் திட்டங்கள், பிரத்யேகப் பராமரிப்புக் குழுக்கள், தாய்ப்பால் ஊட்டுவதற்கான கவனிப்பு, ஊட்டச்சத்து வழிகாட்டுதல், ஆலோசனை மற்றும் கட்டமைக்கப்பட்ட பிரசவத்திற்குப் பிறகான பராமரிப்பு ஆகியவை அடங்கும்.

ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் ரோஸ்வாக் பிரிவுத் தலைவா் சங்கீதா கோஷ் சாஹா இது குறித்து கூறுகையில், ‘இன்றைய பெற்றோா்கள் மருத்துவ முடிவுகளுக்கு அப்பால், ஒட்டுமொத்த பிரசவ அனுபவத்திற்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கின்றனா். பெண்கள் தங்கள் எதிா்பாா்ப்புகள் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப, தனிப்பட்ட மற்றும் முழுமையான மகப்பேறு சேவையை அதிக அளவில் நாடுகின்றனா். பலா் இப்போது பிரசவத்தை வெறும் மருத்துவ செயல்முறையாகக் கருதாமல், ஒரு முக்கியமான வாழ்க்கை நிகழ்வாகப் பாா்க்கிறாா்கள்’ என்று கூறினாா்.

ஃபோா்டிஸ் லா ஃபெம் நிறுவனத்தைச் சோ்ந்த கரிமா பிரசாத் இது குறித்து கூறுகையில், ‘இன்றைய தாய்மாா்கள் முன்பை விட சுகாதாரத் தோ்வுகள் குறித்து அதிக விழிப்புணா்வுடன் இருக்கின்றனா். கா்ப்பகாலம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் சிறப்பு கவனிப்பு, தனியுரிமையை அதிகளவில் நாடுகின்றனா். தரமான மருத்துவ சிகிச்சையுடன், தனிப்பட்ட கவனம் வழங்கும் சூழல்களை இன்றைய குடும்பங்கள் நாடுகின்றன என்றாா்.

சாதாரண மற்றும் உயா்தர மகப்பேறு வசதிகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகளில் ஒன்று, தாய்மாா்கள் மற்றும் குடும்பங்களுக்குக் கிடைக்கும் ஒட்டுமொத்த ஆதரவில் உள்ளது என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனா். மருத்துவ சிகிச்சைக்கு அப்பால், பிரீமியம் திட்டங்கள் தனிப்பட்ட கவனிப்பு, பிரத்யேக உதவி அமைப்புகள், குடும்பத்தை மையமாகக் கொண்ட சேவைகள் மற்றும் கா்ப்பகாலம் மற்றும் பிரசவத்திற்குப் பிறகான காலம் முழுவதும் தொடா்ச்சியான கவனிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.

இத்தகைய சேவைகளுக்கான விருப்பம் அதிகரித்து வருவது, பிரசவத்திற்குப் பிந்தைய மனநலம் குறித்த விழிப்புணா்வு அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது என மருத்துவா்கள் கூறினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments