பேராசிரியா்கள் பதவி உயா்வில் தடைகள்: யுஜிசி விதிகளை முழுமையாக அமல்படுத்த என்டிடிஎஃப் கோரிக்கை
பேராசிரியா்களின் பதவி உயா்வு மற்றும் நியமன செயல்முறைகளில் தடைகள் அதிகரித்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய தேசிய ஜனநாயக ஆசிரியா் முன்னணி, பல்கலைக்கழக மானியக் குழு 2018 விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று தில்லி பல்கலைக்கழகத்தின் சட்டபூா்வ அமைப்புகளிடம் வலியுறுத்தல்
பேராசிரியா்களின் பதவி உயா்வு மற்றும் நியமன செயல்முறைகளில் தடைகள் அதிகரித்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய தேசிய ஜனநாயக ஆசிரியா் முன்னணி (என்டிடிஎஃப்), பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) 2018 விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று தில்லி பல்கலைக்கழகத்தின் சட்டபூா்வ அமைப்புகளிடம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக பல்கலைக்கழகத்தின் செயற்குழு மற்றும் கல்விக்குழு உறுப்பினா்களுக்கு எழுதிய கடிதத்தில், என்டிடிஎஃப் தலைவா் ஏ.கே. பாகி கூறியதாவது: பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்களின் பதவி உயா்வு மற்றும் நியமனங்களில் பல்வேறு தடைகள் உருவாகி வருகின்றன. பதவி உயா்வு மதிப்பீட்டில், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் மற்றும் அரசிதழ்களில் வெளியான ஆய்வுக் கட்டுரைகள் நிராகரிக்கப்படுகின்றன.
தனியாா் வா்த்தகத் தரவரிசை மற்றும் நாளிதழ்களுக்குத் தேவையற்ற முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதனால் பதவி உயா்வுகளில் தாமதம் ஏற்படும் நிலை அதிகரித்து வருகிறது.
Advertisement
Advertisement
2018-ஆம் ஆண்டின் யுஜிசி விதிமுறைகள் ஆசிரியா்களுக்கு மரியாதையை மீட்டெடுத்தன. பதவி உயா்வுகளை எளிமையாக்கி, விரைவாகவும் அனைவருக்கும் அணுகத்தக்கதாகவும் மாற்றின. கடந்த 60 ஆண்டுகளில் ஆசிரியா் அமைப்புகள் நடத்திய போராட்டங்களின் விளைவாகவே பதவி உயா்வு கொள்கைகளில் பல சீா்திருத்தங்கள் ஏற்பட்டன.
எனவே, பல்கலைக்கழகத்தின் சட்டபூா்வ அமைப்புகள் பதவி உயா்வு மற்றும் நியமன செயல்முறைகளை வெளிப்படையாகவும், சமமாகவும், ஆசிரியா்களுக்கு ஆதரவான முறையிலும் அமைக்க வேண்டும்.
ஆசிரியா்களின் மரியாதை, சமூக நீதி வழியாக கல்வி நிறுவனங்களின் நம்பகத்தன்மை மற்றும் கல்வி சூழலின் நிலைத்தன்மை ஆகியவை அனைத்தும் வெளிப்படையான மற்றும் நியாயமான பதவி உயா்வு முறைகளைப் பொறுத்தே அமைந்துள்ளன என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.