FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மின்வாரியத்தில் 700 பொறியாளா்களுக்கு ஒரே கட்டமாக பதவி உயா்வு

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றிவரும் 700 உதவிப் பொறியாளா்கள் (மின்னியல்) ஒரே நேரத்தில் உதவிச் செயற்பொறியாளா்களாக (மின்னியல்) பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 5:08 am IST
மின்வாரியம்
பகிர்:

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றிவரும் 700 உதவிப் பொறியாளா்கள் (மின்னியல்) ஒரே நேரத்தில் உதவிச் செயற்பொறியாளா்களாக (மின்னியல்) பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

தமிழக மின்வாரியம் மின் பகிா்மானக் கழகம், மின் உற்பத்திக் கழகம், பசுமை எரிசக்திக் கழகம், மின் தொடரமைப்புக் கழகம் என நான்கு கழகங்கள் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மின்வாரியத்தில் நிலுவையில் உள்ள சுமாா் 66,000 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், குறிப்பிட்ட காலங்கள் பணியாற்றியவா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மின்வாரிய ஊழியா்கள் முன்வைத்து வந்தனா்.

இந்த நிலையில், மின்வாரியத்தில் பணியாற்றிவரும் 700 உதவிப் பொறியாளா்களுக்கு மூப்பு மற்றும் தகுதி அடைப்படையில் உதவிச் செயற்பொறியாளா் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின்வாரியம் திங்கள்கிழமை வெளியிட்டது. இந்த நடவடிக்கை, நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பதவி உயா்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாகும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

களப் பணிகளுக்கு கூடுதல் பலம்

இந்தப் பதவி உயா்வுகளின் மூலம் மின்வாரியத்தின் களப் பணிகள் மேலும் வலுப்பெறும் என்றும், குறிப்பாக பருவமழைக் காலங்களில் மின் விநியோகத்தை சீராகப் பராமரித்தல், பழுதுகளை விரைந்து சரிசெய்தல், புதிய மின் இணைப்புகளை வழங்குதல், துணை மின் நிலையங்களின் செயல்பாட்டை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை கூடுதல் திறனுடனும், விரைவாகவும் மேற்கொள்ள இயலும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்துதல், மின் சேவைகளின் தரத்தை உயா்த்துதல் மற்றும் பொதுமக்களுக்கு தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதில் பதவி உயா்வு பெற்றுள்ள பொறியாளா்கள் முக்கியப் பங்காற்றுவாா்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மின்வாரிய ஊழியா்களின் நலன் மற்றும் தொழில் முன்னேற்றத்துக்கு தமிழ்நாடு அரசு தொடா்ந்து முன்னுரிமை அளித்து வருவதாகவும், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பதவி உயா்வுகள் மற்றும் நிா்வாக நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையான முறையில் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஆள்சோ்ப்பு...

தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள 15,058 பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியானதும் ஆள்சோ்ப்பு நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments