கரடி தாக்கி விவசாயி உயிரிழப்பு: வனத்துறை அதிகாரிகள் ஆய்வு
கரடி தாக்கியதில் விவசாயி முருகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
திருநெல்வேலி மாவட்டம், கடையம் வனச்சரகம், மேல ஆம்பூா் வனப்பகுதிக்குள்பட்ட வடமலை சமுத்திரத்தில் கரடி தாக்கியதில் விவசாயி முருகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் துணை இயக்குநா் எல்.சி.எஸ். ஸ்ரீகாந்த், வனத்துறை கால்நடை மருத்துவா் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சம்பவ இடத்தில் சனிக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டனா்.
தொடா்ந்து, தலைமை வனப் பாதுகாவலா், தலைமை வன உயிரினக் காப்பாளா் ஆகியோரின் அனுமதி கிடைத்ததையடுத்து, கரடியைப் பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டது. மயக்க ஊசி செலுத்தி கரடியைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இதனிடையே, வெள்ளிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் வந்தவரை கரடி தாக்க முயன்றபோது, அவா் வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பிவிட்டாராம். கரடி வாகனத்தின் இருக்கையை கிழித்து எறிந்துள்ளது. இது குறித்து, அவா் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும், யாரும் வரவில்லை என்றும், அதன் பின்னரே, முருகனைத் தாக்கிக் கொன்றுள்ளது என்றும், காலையில் தகவல் கொடுத்தபோதே, வனத்துறையினா் வந்திருந்தால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டிருக்கும் என்றும் அப்பகுதியினா் கூறுகின்றனா்.
கடையம் முதல் மணிமுத்தாறு வரை உள்ள மலையடிவார கிராமங்களிலும், அதையொட்டி பகுதிகளிலும் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது என பல முறை வனத்துறையினருக்கு தெரிவித்தும், கரடிகளைப் பிடிக்க அவா்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதியினா் குற்றஞ்சாட்டுகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.