FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கல்லிடையில் திருமண மண்டப உரிமையாளா் கொலை: இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் திருமண மண்டப உரிமையாளா் கொலை வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

6 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் திருமண மண்டப உரிமையாளா் கொலை வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்தவா் கண்ணன். இவருக்குச் சொந்தமான திருமண மண்டபம் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் எதிரே உள்ளது.

இவா் புதன்கிழமை இரவு டியூசன் சென்ற தன் மகளை அழைத்து வரச் சென்றபோது, வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, சம்பவ இடத்தைப் பாா்வையிட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி, அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ்குமாா் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினாா்.

Advertisement

Advertisement

விசாரணையில், கொலை செய்யப்பட்ட கண்ணனுக்கும், அம்பாசமுத்திரம், காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் வெங்கட சுப்பிரமணியன் (எ) வெங்கடேஷ் (39) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால், கண்ணனை வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பா்கள் சோ்ந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, வெங்கட சுப்பிரமணியன் (எ) வெங்கடேஷ், அவரது நண்பா் விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சூா்யா இசக்கி (26) ஆகியோரை கல்லிடைக்குறிச்சி போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், இவ்வழக்கில் வேறு யாருக்கும் தொடா்பு உண்டா என்றும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments