தமிழகத்தில் விற்கப்படும் மீன்களில் ரசாயன கலப்பு இல்லை: மாணவர்கள் ஆய்வறிக்கை
சுங்கான்கடை வின்ஸ் கிறிஸ்வ பொறியியல் கல்லூரி மாணவர்கள் தமிழகத்திலுள்ள பல்வேறு கடலோரபகுதிகளுக்கு சென்று ஆய்வு
சுங்கான்கடை வின்ஸ் கிறிஸ்வ பொறியியல் கல்லூரி மாணவர்கள் தமிழகத்திலுள்ள பல்வேறு கடலோரபகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து தமிழகத்தில் விற்கப்படும் மீன்களில் ரசாயனம் கலக்கப்படவில்லை என தங்கள் ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளனர்.
மீன்களில் ரசாயனம் கலக்கப்படுவதாக பரவிய தகவல் மக்களிடையே மீன் உணவுகள் மீது அச்சத்தை ஏற்படுத்தியது. அண்டை மாநிலமான கேரளத்தில் கொல்லம் மாவட்ட எல்லையில் அம்மாநில உணவுப் பாதுகாப்புத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் பாதுகாக்கப்பட்ட 9600 கிலோ மீன்கள் ரசாயனம் கலக்கப்பட்டவை என தெரியவந்தது.
இதையடுத்து, தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் மீன்களில் ரசாயனம் கலக்கப்படுகிறதா என சுங்கான்கடை வின்ஸ் கிறிஸ்தவ கல்லூரி மேலாண்மை துறை மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மேலாண்மை துறைத் தலைவர் திலீப், உதவிப் பேராசிரியர்கள் லெனின் ஜாண், சிந்திகா, அபிஷா ஆகியோர் தலைமையில் 60 பேர் கொண்ட 10 குழுவினர் கடலூர், நாகை, ராமேசுவரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 30 நாள்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
வேளாண் அமைச்சகத்தின் கீழ் மத்திய மீன்வள தொழில்நுட்ப மையம் அறிமுகப்படுத்திய காகிதப் பட்டை மற்றும் சிறு குப்பியில் உள்ள அமிலத்தை பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வின்போது காகிதப் பட்டையை மீன்களின் மீது தேய்த்தபின்பு குப்பியில் கொடுக்கப்பட்ட ஒரு துளி அமிலத்தை ஒவ்வொரு மீனிலும் தேய்த்தனர். மீன்களில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. மீன்களில் ரசாயனம் கலக்கப்பட்டிருந்தால் இருண்ட நீலநிற மீன்களாக மாறி இருக்கும்.
பின்னர், ஏற்றுமதிக்காக வைக்கப்பட்ட மீன்கள் மற்றும் உள்ளூரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 மீன்களை எடுத்து பரிசோதனை செய்தனர். இதிலும் எந்த மீன்களும் நிறம் மாறவில்லை. அனைத்து மீன்களும் நல்ல நிலையில்தான் விற்கப்படுகிறது என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்தனர்.
ஆய்வின்போது மீனவர்கள் கூறும்போது தாங்கள் பிடித்த மீன்களை ஐஸ் மற்றும் உப்பு கலந்து பாதுகாக்கிறோம். மீன்களில் எந்தவித ரசாயனமும் பயன்படுத்தவில்லை. எனவே, அரசு இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்ததாக மாணவர்கள் தங்கள் ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.