ஆரோக்கியபுரத்தில் சுனாமி ஒத்திகை
கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தில் சுனாமி மாதிரி ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தில் சுனாமி மாதிரி ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
இந்தியாவின் கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுனாமி ஒத்திகை நடத்த ஹைதராபாத்திலுள்ள இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீசுவரம் ஒன்றியத்துக்குள்பட்ட ஆரோக்கியபுரம் கடற்கரை கிராமத்தில் சுனாமி ஒத்திகை நடைபெற்றது. காலை 9 மணியளவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து கடற்கரையோரம் வசிக்கும் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் அவசரமாக மீட்கப்பட்டு, தனியார் கல்வி நிறுவன வாகனங்களில் கன்னியாகுமரி அரசு தொடக்கப் பள்ளி வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் பிற்பகல் 12.35 மணிக்கு சுனாமி போன்ற பேரிடரின் போது தகவல் தொடர்புகளை துரிதமாக கையாண்டு பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்பது போன்ற ஒத்திகை நடைபெற்றது.
ஒத்திகை: கடலுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் இருந்து மீட்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் வரிசையாக தரையில் கிடத்தப்பட்டனர். மேலும், உயரமான கட்டடங்களில் சிக்கியவர்களை தீயணைப்புப் படை வீரர்கள் பத்திரமாக மீட்டு அவர்களுக்கு லீபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கன்னியாகுமரி மற்றும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் சுனாமி பாதித்த ஆரோக்கியபுரத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவின் பேரில், நாகர்கோவில் கோட்டாட்சியர் ஜானகி, அகஸ்தீசுவரம் வட்டாட்சியர் ஆறுமுகநயினார், கன்னியாகுமரி காவல் ஆய்வாளர் ஜெயசந்திரன், தீயணைப்பு நிலைய அதிகாரி துரை, வருவாய் அலுவலர் திவான் உள்ளிட்ட அதிகாரிகள் முகாமிட்டு சுனாமி ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.