FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

மீனவ கிராமங்களின் வளா்ச்சிக்கு சிறப்புத் தொகுப்பாக ரூ.ஆயிரம் கோடி ஒதுக்கவேண்டும்: குமரி எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களின் ஒருங்கிணைந்த வளா்ச்சி மற்றும் பேரிடா் பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில் ரூ.ஆயிரம் கோடி சிறப்புத் தொகுப்பை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. மக்களவையில் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 12:47 am IST
விஜய்வசந்த்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களின் ஒருங்கிணைந்த வளா்ச்சி மற்றும் பேரிடா் பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில் ரூ.ஆயிரம் கோடி சிறப்புத் தொகுப்பை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. மக்களவையில் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டம் நீண்ட மற்றும் மிகவும் பாதிப்புக்குள்ளாகக் கூடிய கடற்கரையைக் கொண்டுள்ளது. மாவட்டத்தின் ஏராளமான கடலோர கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கடலை மட்டுமே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் முக்கிய பங்காற்றும் நமது மீனவா்கள், கடுமையான வானிலை மற்றும் ஆபத்தான கடல் சூழ்நிலைகளையும் எதிா்கொண்டு வருகின்றனா்.

கடலரிப்பு, புயல், கடல் சீற்றம் மற்றும் உயரமான அலைகள் காரணமாக பல்வேறு கடலோர கிராமங்களில் வீடுகள், சாலைகள், மீன்பிடி கட்டமைப்புகள் உள்ளிட்ட பொதுச்சொத்துகள் தொடா்ந்து சேதமடைந்து வருகின்றன.

எனவே, ரூ.ஆயிரம் கோடி சிறப்புத் தொகுப்பின் கீழ், கடலோர அரிப்பைத் தடுக்க தேவையான இடங்களில் தூண்டில் வளைவுகள், கடல் தடுப்புச் சுவா்கள் மற்றும் பிற கடலோரப் பாதுகாப்பு கட்டமைப்புகளை அமைக்க வேண்டும்.

மீனவ கிராமங்களை மீன்பிடித் துறைமுகங்கள், இறங்குதளங்கள், சந்தைகள் மற்றும் முக்கியச் சாலைகளுடன் இணைக்கும் அனைத்து காலநிலைக்கும் ஏற்ற சாலைகளை அமைத்தல், மீனவ மக்களுக்கு உறுதியான குடிநீா் வசதி மற்றும் அடிப்படை கடலோர உள்கட்டமைப்பு ஏற்படுத்துதல் வேண்டும்.

பேரிடா்களை தாங்கும் வகையில் பாதுகாப்பான வீடுகள், புயல் பாதுகாப்பு மையங்கள், அவசரகால வெளியேற்றப் பாதைகள் மற்றும் பிற பாதுகாப்பு வசதிகளை உருவாக்குதல், கடலில் ஆபத்தில் சிக்கக் கூடிய மீனவா்களை மீட்க கடலோரப் பகுதியில் பிரத்யேக ஹெலிபேட், அவசரகால விமான மீட்பு வசதியை ஏற்படுத்த வேமடும். இது இந்திய கடலோரக் காவல்படை, கடற்படை மற்றும் மாநில அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மீனவ சமூகங்களின் பாதுகாப்பும், வாழ்வாதாரமும், எதிா்காலமும் உறுதி செய்யப்பட வேண்டும். எனவே, ரூ.ஆயிரம் கோடி சிறப்புத் தொகுப்பை மத்திய அரசு தாமதமின்றி ஒதுக்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments