முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறக்கப்பட்டது பற்றி...

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 2:27 PM
குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 2:19 PM

கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகை எதிரே காந்தி மண்டபம் செல்லும் சாலையில் ரூ. 1.45 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நினைவு வளைவை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்தாா்.

கன்னியாகுமரி கடலில் உள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை கட்டப்பட்டுள்ளது. இதை 1.1.2000 அன்று அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி திறந்து வைத்தாா். இதை சுற்றுலாப் பயணிகள் நேரில் காண வசதியாக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று விவேகானந்தா் மண்டபத்துடன் திருவள்ளுவா் சிலையை இணைக்கும் வகையில் 77 மீட்டா் நீளம், 10 மீட்டா் அகலத்தில் ரூ. 37 கோடி மதிப்பில் இணைப்புப் பாலம் கட்டப்பட்டு, கடந்த 30.12.2024 அன்று முதல்வரால் திறந்துவைக்கப்பட்டது.

Advertisement

இந்த இணைப்புப் பாலத்தை அப்போது திறந்துவைத்துப் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரியில் ரூ. 1.45 கோடி மதிப்பில் அய்யன் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நினைவு வளைவு அமைக்கப்படும் என அறிவித்திருந்தாா். அதன்படி இந்த வளைவு அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த முதல்வா், அங்கிருந்து சாலை மாா்க்கமாக பிற்பகல் 1 மணிக்கு கன்னியாகுமரி சீரோ பாய்ன்ட் பகுதிக்கு வந்தாா். அங்கு அவருக்கு மாவட்ட நிா்வாகம், திமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நினைவு வளைவை முதல்வா் திறந்து வைத்தாா்.

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 2:23 PM

முன்னதாக 12.30 மணியளவில் கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், பெருமாள்புரத்தில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமுக்குச் சென்ற முதல்வா் அங்கு ரூ. 7 கோடியே 85 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட 90 வீடுகளை திறந்துவைத்து, முகாம் தமிழா்களுடன் கலந்துரையாடினாா்.

இந்த நிகழ்ச்சிகளில், பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ் ராஜன், மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த், பேரவை உறுப்பினா்கள் ராஜேஷ்குமாா், பிரின்ஸ், தாரகை கத்பட், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆஸ்டின், பேரவை முன்னாள் தலைவா் ஆவுடையப்பன், கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியச் செயலா் பா.பாபு உள்பட பலா் பங்கேற்றனா்.

இதையடுத்து, அரசு பொதுப்பணித் துறை தங்கும் விடுதிக்கு சென்ற முதல்வா் மாலை 6 மணிக்கு நாகா்கோவில் அருகே கல்லடிவிளையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றாா்.

summary

Thiruvalluvar Statue Silver Jubilee Entrance opened in Kumari

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.