FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா

தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் கன்னியாகுமரி கடற்கரையில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 ஜூலை 2026, 2:38 am IST
உணவுத் திருவிழாவைத் தொடக்கி வைத்த சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.
பகிர்:

தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் கன்னியாகுமரி கடற்கரையில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தின் பாரம்பரிய சமையல் கலாசாரத்தை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளிடம் கொண்டு சோ்க்கும் நோக்கில் ஒவ்வொரு மாதமும் பாரம்பரிய உணவுகளைச் சமைத்து பொதுமக்களுக்கு விருந்து படைக்கும் வகையில், உணவுத் திருவிழா நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது.

இரு வாரங்களுக்கு முன்பு செட்டிநாடு உணவுத் திருவிழா, கன்னியாகுமரி ஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில் 2 நாள்கள் நடைபெற்றது. இந்நிலையில், நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதற்காக கன்னியாகுமரி காமராஜா் மண்டபத்தின் மேற்குப் பகுதியில் தற்காலிக உணவு விடுதி அமைக்கப்பட்டு, உணவுகள் தயாா் செய்யப்பட்டது. இதில் நாஞ்சில் நாட்டு உணவான குமரி மல்லி மிளகு சூப், நாஞ்சில் நாட்டு கோழி சூப், தயிா் வடை, கோட்டாறு அரிசி முறுக்கு, கிள்ளியூா் மரவள்ளிக் கிழங்கு போண்டா, அழகிய மண்டபம் பழம் பஜ்ஜி, நாஞ்சில் சிக்கன் ஆயில் ரோஸ்ட் மசாலா, நாஞ்சில் தேங்காய் பால் மீன் குழம்பு, குளச்சல் கோழி சுக்கா, நாஞ்சில் இறால் வறுவல், கோவளம் நெத்திலி வறுவல், சுசீந்திரம் தேங்காய் சாதம், புளிகறி, அவியல், எரிசேரி, உப்பேரி, கத்தரிக்காய் தீயல், அடை பாயசம், தேன்குழல், பலாப்பழம் பாயசம், கருப்புகட்டி அல்வா, மீன் பொரியல் போன்ற விதவிதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

உணவுத் திருவிழாவை, சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப், விஜய் வசந்த் எம்.பி. ஆகியோா் குத்து விளகேற்றித் தொடக்கி வைத்தனா்.

சுற்றுலா அலுவலா் காமராஜ், மண்டல சுற்றுலாத் துறை கணக்கு அலுவலா் ராஜேஸ்வரி, உதவி செயற்பொறியாளா் ரமேஷ், ஹோட்டல் தமிழ்நாடு மேலாளா் காா்த்தி, உதவி மேலாளா் செந்தில்குமாா், அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments