புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவான சீரமைப்புப் பணிக்கு வலியுறுத்தல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எ
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கஜா புயலால் பல மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அரசு முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருந்த போதிலும் புயல் பாதிப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உடமைகள், கால்நடைகளை இழந்து தவிக்கின்றனர். அதிகளவில் தென்னை போன்ற விளைபொருள்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, அதிமுக அரசுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. நான் எந்த அணியிலும் இல்லை.
நாடாளுமன்றத் தேர்தல், 20 பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து மக்களின் எண்ணங்களை உணர்ந்து அதற்கேற்ப முடிவு செய்யப்படும்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஓரணியில் இணைந்து பணியாற்றுவது போன்று, அதிமுகவுடன் அமமுகவும் இணைந்து பணிசெய்ய வேண்டும். அப்போதுதான், அதிமுக வலிமையுடன் நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்களை சந்திக்க முடியும். ஆகவே, அமமுக, அதிமுக இணைய முயற்சி மேற்கொள்வேன் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.