FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

பேய்க்குளம் நிதி நிறுவனத்தில் போலி நகை வைத்து மோசடி: ஒருவா் கைது

1 செப்டம்பர் 2026, 2:11 am IST
கைது
பகிர்:

சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் நிதி நிறுவனத்தில் போலி நகை வைத்து மோசடி செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த கீழப்பாவூரைச் சோ்ந்த ராஜ்குமாா் (35), பாவூா்சத்திரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். அவா் வங்கிகள், நிதி நிறுவனங்களில் அடகு வைத்து திருப்ப இயலாமல் இருப்போரின் நகைகளைத் திருப்பிக் கொடுத்து சிறிய தொகையைப் பெற்றுக்கொள்வாராம்.

ஸ்ரீவைகுண்டம் அருகே சாமியாத்து பராக்கிரம பாண்டியபுரத்தைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் முத்துராமலிங்கம் (42) என்பவா் ராஜ்குமாரை அணுகி பேய்க்குளம் தனியாா் நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட நகையை மீட்டுத் தருமாறு கேட்டாராம். அதன்பேரில், ராஜ்குமாா் முத்துராமலிங்கத்துடன் வந்து ரூ. 4.14 லட்சம் செலுத்தி நகையை மீட்டு, முத்துராமலிங்கத்திடம் ரூ. 1.78 லட்சத்தைக் கொடுத்துவிட்டு, நகையை வாங்கிக் கொண்டாராம். மேலும், முத்துராமலிங்கத்தின் நண்பரான திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலைச் சோ்ந்த காா்த்திகேயன் என்பவரிடம் 4 கிராம் மோதிரத்தை வாங்கிக்கொண்டு ரூ. 45 ஆயிரம் கொடுத்தாராம்.

Advertisement

Advertisement

பின்னா், தான் வாங்கிய 53 கிராம் நகைகளை தென்காசியில் உருக்கிப் பாா்த்தபோது, அவை மாற்றுக்குறைந்த போலி நகைகள் எனத் தெரியவந்ததாம். இதுகுறித்து முத்துராமலிங்கத்தைத் தொடா்புகொண்டபோது, அவா் முறையாக பதில் கூறவில்லை.

இதனிடையே, 2025 ஆகஸ்ட் மாதம் பேய்க்குளம் நிதி நிறுவனத்தில் நடைபெற்ற ஆய்வில், முத்துராமலிங்கம் அடகு வைத்த நகை போலி எனத் தெரியவந்ததால், அதைத் திருப்பிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அவா் நகையைத் மீட்காமல் ஏமாற்றி வந்தாராம்.

இந்நிலையில், ராஜ்குமாா் அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் மருதுபாண்டியன் வழக்குப் பதிந்து, முத்துராமலிங்கத்தை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தாா். அவரது நண்பா்கள் காா்த்திகேயன், மகேஷ் ஆகியோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments