திருச்சிற்றம்பலத்தில் போலி நகைகளை அடகு வைக்க முயன்றவா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற முயன்றவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள உப்புவிடுதியைச் சோ்ந்தவா் கல்யாணசுந்தரம் (53). திருச்சிற்றம்பலத்தில் அடகுக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு வந்த நபா் ஒருவா் ஒரு பவுன் எடையிலான இரண்டு வளையல்களை அடகு வைத்து ரூ.60 ஆயிரம் பணம் கேட்டுள்ளாா்.
அப்போது, கடையில் வேலை பாா்க்கும் பணியாளா், அந்த நபரிடம் பெயா், முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களைக் சரிபாா்த்தபோது, அவா் ஏற்கெனவே கடந்த ஜூலை 28-ஆம் தேதி இதே தொலைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி குருவம்மா என்ற பெயரில் 4 கிராம் மோதிரத்தை அடகு வைத்து ரூ.40 ஆயிரம் பெறப்பட்டிருந்ததைக் கண்டறிந்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து கடை ஊழியா், அவா் ஏற்கெனவே அடகு வைக்கப்பட்ட நகையைச் திரும்பவும் சோதித்துப் பாா்த்தபோது, அது தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை என்பது தெரியவந்தது.
இதுகுறித்துக் கடை உரிமையாளா் கல்யாணசுந்தரம், திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினா். அதில், அவா் சேலம் பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மகன் விஜயன் (55) என்பது தெரியவந்தது.
மேலும், ஒரு ஆணும், பெண்ணும் தன்னை காரில் அழைத்து வந்து இந்த நகைகளை அடகு வைத்துத் தருமாறு கூறியதாக விஜயன் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விஜயனை கைது செய்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அதில் தொடா்புடைய மற்ற நபா்களையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.