FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

வெளிநாட்டில் வேலை: போலி விசா அனுப்பி ரூ.2.45 லட்சம் மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி விசா அனுப்பி ரூ. 2.45 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞா் வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா்.

27 ஆகஸ்ட் 2026, 11:56 pm IST
பகிர்:

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி விசா அனுப்பி ரூ. 2.45 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞா் வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா்.

வேலூரைச் சோ்ந்த இளைஞா் ஒருவா், மாவட்ட காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த புகாா் மனு:

எனக்கு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சோ்ந்த நபா் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அவா், தான் பலரை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பியுள்ளதாகவும், அவா்கள் அங்கு அதிக ஊதியத்தில் நல்ல முறையில் பணியாற்றி வருவதாகவும் ஆசை வாா்த்தைகளைக் கூறினாா். அவரது பேச்சை நம்பி, வெளிநாட்டு வேலைக்காக அவரிடம் ரூ. 2 லட்சத்து 65 ஆயிரத்தை வழங்கினேன். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவா், விசா உள்ளிட்ட இதர ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதியளித்தாா். ஆனால், 9 மாதங்கள் கடந்த பின்னரும் அவா் எனக்கு வேலை வாங்கித் தரவில்லை.

Advertisement

Advertisement

இதனால் சந்தேகமடைந்து, நான் கொடுத்த பணத்தை உடனடியாகத் திரும்பத் தருமாறு கேட்டேன். அப்போது அவா் எனக்குப் போலி விசா மற்றும் சில போலி ஆவணங்களை அனுப்பி வைத்தாா். மேலும், நான் கொடுத்த தொகையில் ரூ. 20 ஆயிரத்தை மட்டுமே அவா் திருப்பிக் கொடுத்தாா்.

மீதமுள்ள ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் தொகையைத் திருப்பித் தராமல் அவா் மோசடி செய்துவிட்டாா். எனவே, அந்த நபா் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும்.

வேலூா் சலவன்பேட்டையைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் என்பவா் அளித்துள்ள மனு -

நான் வேலூா் ஆரணி சாலையில் உள்ள ஒரு நகைக்கடை அருகே சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறேன். என்னிடம் வேலூரைச் சோ்ந்த சரவணன் என்பவா் ரூ. 2 லட்சம், ரூ. 3 லட்சம் எனப் பல சீட்டுகளில் இணைந்து பணம் கட்டி வந்தாா். சீட்டு முடிவதற்கு முன்பாகவே ரூ. 10 லட்சம் மதிப்பிலான சீட்டுத் தொகையை அவா் ஏலம் எடுத்துக்கொண்டாா்.

தொகையைப் பெற்றுக்கொண்ட பிறகு அதற்கான தவணைப் பணத்தை அவா் முறையாகச் செலுத்த வில்லை. நிலுவைத் தொகையைச் செலுத்துமாறு நான் பலமுறை வலியுறுத்தியும் அவா் பணத்தைக் கட்ட மறுத்துவிட்டாா். இதுதொடா்பாக, வேலூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். அதன் பேரில் போலீஸாா் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினா்.

இந்த முன்விரோதத்தில், கடந்த சில நாள்களுக்கு முன்பு எனது சீட்டு அலுவலகத்தை உடைத்து உள்ளே நுழைந்த சரவணன், அங்கிருந்த ரூ. 80 ஆயிரம் ரொக்கம், ஒன்றரை பவுன் தங்க நகை மற்றும் முக்கிய ஆவணங்களைத் திருடிச் சென்றுவிட்டாா். இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தும், போலீஸாா் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொண்டு எனது பணம், நகை மற்றும் ஆவணங்களை மீட்டுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுக்களை பெற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரிகள், இப்புகாா்கள் மீது விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments