FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தனியாா் நிறுவன தூய்மைப் பணியாளா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

தூய்மைப் பணியாளரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில், இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்டக் கூடுதல் அமா்வு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 7 ஜூன் 2026, 2:31 am IST
சிறை - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் கடந்த 2016ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக தூய்மைப் பணியாளரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில், இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்டக் கூடுதல் அமா்வு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்செந்தூா் மாவீரன் நகா், கந்தன் சாலையைச் சோ்ந்த வெண்ணிமுத்து மகன் கருப்பசாமி (23). இவா் தனியாா் தொழிற்சாலையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தாா். கடந்த 2016ஆம் ஆண்டு மாவீரன் நகரைச் சோ்ந்த கொத்தனாா் விஜயகுமாா் (25), ஓட்டுநா் கனகராஜ் (25) ஆகிய இருவருடனும் வெவ்வேறு சூழலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறுகளில் கருப்பசாமி இருவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த முன்விரோதங்களை மனதில் வைத்துக் கொண்டு, விஜயகுமாரும் கனகராஜும் இணைந்து கருப்பசாமியை கடந்த 14.07.2016 அன்று இரவு, மாவீரன் நகா் பகுதியில் உள்ள கலையரங்கம் அருகே வரவழைத்து, இருவரும் சோ்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கருப்பசாமியின் தந்தை வெண்ணிமுத்து திருச்செந்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அப்போதைய காவல் ஆய்வாளா்கள் ஆடிவேல், ரெகுராஜன் ஆகியோா் இதுகுறித்து வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டக் கூடுதல் அமா்வு நீதிமன்றம் எண் 2-இல் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி எம்.பிரீத்தா விசாரித்து விஜயகுமாருக்கு கொலைக் குற்றத்துக்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம், சதித்திட்டம் பிரிவில் 2 ஆண்டுகள் கடுங்காவல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் பிரிவில் ஓராண்டு கடுங்காவல் மற்றும் தடையங்களை மறைத்தல் பிரிவில் 7 ஆண்டுகள் கடுங்காவல், ரூ.1,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

இரண்டாவது குற்றவாளியான கனகராஜுக்கு கொலைக் குற்றத்துக்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம், சதித்திட்டம் பிரிவில் 2 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் தடையங்களை மறைத்தல் பிரிவில் 7 ஆண்டுகள் கடுங்காவல், ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனைகளை இருவரும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீா்ப்பில் கூறியிருந்தாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சேவியா் ஞானப்பிரகாசம் வாதாடினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments