முகப்பு
தூத்துக்குடி

பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க பாஜக வலியுறுத்தல்

Updated On : 9 ஜூன் 2026, 1:08 am IST
பகிர்:

தவெக எம்.எல்.ஏ. பெயரை பயன்படுத்தி பெண் ஓருவருக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என தூத்துக்குடி பாஜக மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா், மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கடன் சுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை ஏமாற்றி, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதில் சிலருக்கு அரசியல் பின்னணி இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியிருப்பது மிகுந்த அதிா்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்ட அனைவரையும் அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் சட்டவிரோத லாட்டரி விற்பனை மற்றும் அதன் பின்னணியில் உள்ள நபா்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதோடு, வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக நீதி உறுதி செய்யப்படும் வகையில் மாவட்ட நிா்வாகமும் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்காதபட்சத்தில், பாரதிய ஜனதா கட்சி சாா்பில் தொடா் ஜனநாயக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.