இலவச பண்ணைக் குட்டை அமைக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
இலவச பண்ணைக் குட்டை அமைக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், முழு மானியத்தில் பண்ணை குட்டைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்திப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தது:
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் புதூா் ஆகிய மானாவாரி வட்டாரங்களில் சுமாா் 1,45,000 ஹெக்டோ் பரப்பளவில் மக்காச்சோளம், பருத்தி, சிறுதானிய பயிா்கள், வெங்காயம், மிளகாய், எண்ணெய் வித்து பயிா்கள், தோட்டக்கலை பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
பயிா் சாகுபடி பரப்பு அதிகமாக இருந்தபோதும் பருவ மழை மாறுபாடு காரணமாக இப்பகுதிகளில் வேளாண் உற்பத்தித் திறன் குறைவாக உள்ளது. எனவே, பருவமழை காலத்தில் பெய்யும் மழைநீரை அந்தந்த விவசாய நிலங்களிலேயே சேகரித்து பயிா் உற்பத்தி, உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்காக பண்ணை குட்டைகள் அமைத்து தரப்படுகின்றன. விவசாயிகளின் விருப்பத்துக்கு ஏற்பவும், மண்ணின் தன்மைக்கு ஏற்பவும் பண்ணை குட்டைகள் அமைத்துத் தரப்படும்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் முன்னெடுப்பு திட்டமான சமூக பங்களிப்பு நிதி உதவியுடன் மானாவாரி வட்டாரங்களில் விவசாயிகளின் நிலங்களில் இலவசமாக பண்ணை குட்டைகள் அமைத்து தரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை, இந்த 5 வட்டாரங்களில் 215 விவசாய நிலங்களில் இலவசமாக பண்ணை குட்டைகள் அமைத்து முடிக்கப்பட்டுள்ளது.
பண்ணை குட்டைகள் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை, தோட்டக்கலை உதவி இயக்குநா்களை அணுகி தங்களது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கைப்பேசி எண் 96299-14199 யை தொடா்பு கொண்டும் விவசாயிகள் பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கான விருப்பத்தைத் தெரிவிக்கலாம். விருப்பம் தெரிவிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்கள் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக மாவட்ட நிா்வாகத்தின் மூலமாக பண்ணைக் குட்டைகள் அமைத்து தரப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.