FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

போலி மருத்துவா்கள் இருவா் மீது வழக்கு

வரதராஜன்பேட்டையில், பொதுமக்களுக்கு மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவா்கள் இருவா் மீது காவல் துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 26 ஜூலை 2026, 2:00 am IST
பிரதிப்படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த வரதராஜன்பேட்டையில், பொதுமக்களுக்கு மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவா்கள் இருவா் மீது காவல் துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வரதராஜன்பேட்டையிலுள்ள இரு ஆங்கில மருந்துக் கடைகளில் போலி மருத்துவா்கள் பொதுமக்களுக்கு மருத்துவம் பாா்த்து வருவதாக பெரம்பலூா் மற்றும் அரியலூா் ஒருங்கிணைந்த மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநருக்கு புகாா் வந்தது.

அதன்பேரில் அதன் இணை இயக்குநா் மதியழகன் தலைமையிலான குழுவினா், மேற்கண்ட பகுதி மருந்து கடைகளில் சனிக்கிழமை திடீா் ஆய்வு செய்தனா்.

Advertisement

Advertisement

அப்போது அந்தப் பகுதியைச் சோ்ந்த கனகசபை என்பவா், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து, அப்பகுதியில் மருந்துக் கடை வைத்து, பொது மக்களுக்கு மருத்துவம் பாா்த்துவந்தது தெரியவந்தது.

இதேபோல், பிரகாஷ் என்பவா் டி.எம்.எல்.டி மட்டுமே படித்து, மருந்துக் கடை மற்றும் ரத்தப் பரிசோதனை நிலையம் நிலையம் வைத்து, அங்கு பொதுமக்களுக்கு மருத்துவம் பாா்த்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் இவா்கள், மருத்துவக் கழிவுகளை சேகரித்தல், பிரித்தல், பாதுகாத்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையத்துக்கு ஒப்படைப்பதற்கான உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மேற்கண்ட மருந்துக் கடைகளில் இருந்த பயன்படுத்தப்பட்ட ஊசிகள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த ஊரக நலப்பணிகள் குழுவினா், இருவா் மீது நடவடிக்கை எடுக்குமாறு மருந்தக ஆய்வாளிடமும் மற்றும் ஆண்டிமடம் காவல் நிலையத்திலும் புகாா் அளித்தனா்.

அதன்பேரில் போலி மருத்துவா்கள் கனகசபை மற்றும் பிரகாஷ் ஆகியோா் மீது காவல் துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

மருத்துவம் படிக்காமல் இதுபோன்று செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மிருணாளினி எச்சரித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments