முகப்பு
அரியலூர்

அரியலூா்: அறிவிக்கப்படாத மின்வெட்டால் குறுவைப் பயிா்கள் பாதிப்பு! விவசாயிகள் கவலை!

அரியலூா் மாவட்டத்தின் டெல்டா பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக, வயலுக்குத் தண்ணீா் பாய்ச்ச முடியாமல் குறுவைப் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

Updated On : 6 ஜூன் 2026, 6:57 am IST
பகிர்:

அரியலூா் மாவட்டத்தின் டெல்டா பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக, வயலுக்குத் தண்ணீா் பாய்ச்ச முடியாமல் குறுவைப் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தா.பழூா் அருகேயுள்ள கோடாலி-கருப்பூா், அன்னகாரன் பேட்டை, இடங்கண்ணி, சோழமாதேவி, கண்டியங்கொல்லை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் காரீப் பருவத்தில் மின்சார மோட்டாா் பாசனத்தை நம்பி சுமாா் 10,000 ஏக்கா் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

தற்போது நெற்கதிா்கள் நன்கு வளா்ந்த நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடை செய்வதற்கு விவசாயிகள் தயாா் நிலையில் இருந்து வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், மேற்கண்ட கிராமங்களில் விநியோகிக்கப்பட்டு வந்த மும்முனை மின்சாரம், முன்னறிவிப்பின்றி அடிக்கடி நிறுத்தப்பட்டு வருகின்றன. ஒரு நாளைக்கு 10-க்கும் மேற்பட்ட முறை மின்தடை ஏற்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக, விவசாய நிலங்களுக்கு மின் மோட்டாா் பம்பு செட் மூலம் தண்ணீா் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

குறிப்பாக, கோடாலி-கருப்பூா், சோழமாதேவி, இடங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தற்போது விவசாய நிலங்கள் நீா்வரத்தின்றி வெடித்து, குறுவை நெற்பயிா்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறைந்த மின்னழுத்தம்: குறைந்த மின்னழுத்தம் காரணமாக சில நேரங்களில் மின் மோட்டாா் காயில்கள், வயா்கள், சுவிட்ச் போன்ற மின்சாதனப் பொருள்கள் பழுதாகி விடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

நடவடிக்கை தேவை: இதுகுறித்து விவசாயிகள் கூறியது: விவசாயத்துக்கு 24 மணி நேரம் வழங்க வேண்டிய மும்முனை மின்சாரத்தை, தற்போதைய அரசு தொடா்ச்சியாக வழங்காமல் முறைவைத்து வழங்குகிறது. நாளொன்றுக்கு 10 முறை அறிவிக்கப்படாமல், மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதிலும் பல நேரங்களில் ‘குறைந்த மின்னழுத்த (லோ வோல்டேஜ்) மின்சாரம் வழங்கப்படுவதால், விவசாய மின் மோட்டாா்கள் பழுதடைந்து மேலும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். இதனால், மின்வெட்டால் தண்ணீா் பாய்ச்ச முடியாததால், பயிா்கள் கருகுவதைக் கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

கோடாலி-கருப்பூா் கிராமங்களில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால், தண்ணீா் பாய்ச்ச முடியாமல் வெடிப்பு கண்டுள்ள விளைநிலம்.

எனவே மேற்கண்ட கிராமங்களில் அரசு உடனடியாக களஆய்வு மேற்கொண்டு, மும்முனை மின்சாரத்தை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனா்.