FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

சாயக்கழிவு நீர் திறந்து விட்ட ஆலை மின் இணைப்பு துண்டிப்பு: மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

கரூர் அருகே சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீரை அணைப்பகுதி தண்ணீரில் திறந்து விட்ட சாயப்பட்டறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 8:57 am IST
பகிர்:

கரூர் அருகே சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீரை அணைப்பகுதி தண்ணீரில் திறந்து விட்ட சாயப்பட்டறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென மாசுகட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. கரூர் அருகேயுள்ள செட்டிப்பாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து பிரியும் திருமாநிலையூர் ராஜவாய்க்கால் சணப்பிரட்டி வழியாக மணவாசி வரை சுமார் 27கி.மீ. தொலைவு செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் சுமார் 8,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 
அண்மையில் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் செட்டிப்பாளையம் அணைக்கட்டில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இந்நிலையில் அணையின் அருகே உள்ள செங்காளிபாளையத்தில் இயங்கும் சாயப்பட்டறையில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் செட்டிபாளையம் அணைக்க்கட்டுப்பகுதி மற்றும் ராஜவாய்க்காலில் விடுவதாக மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து செயலாளர் ராமலிங்கம் தலைமையில் புதன்கிழமை காலை விவசாயிகள் அணைக்கட்டுப் பகுதியைப் பார்வையிட்டனர். அப்போது அணைக்கட்டுப்பகுதியில் தேங்கியிருந்த நீர் மற்றும் திருமாநிலையூர் ராஜவாய்க்கால் ஆகிய பகுதிகளில் சாயக்கழிவு நீர் தேங்கியிருப்பதைக் கண்டனர். இதுகுறித்து மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ராஜேந்திரபாபுவுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் அணைக்கட்டு, ராஜவாய்க்காலில் கலந்துள்ள நீரையும் ஆய்வு செய்த போது, அதில் சாயக்கழிவு நீர் கலந்திருப்பது உறுதியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆலைக்கு மின் சப்ளையை உடனடியாக துண்டிக்க மின்வாரிய அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். 
இதுதொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ராஜேந்திரபாபு கூறுகையில், விவசாயிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இங்கு ஆய்வு செய்தபோது, சாயக்கழிவு நீர் அணைக்கட்டுப் பகுதியில் கலந்திருப்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது. இந்த சாயக்கழிவுக்கு காரணம் செங்காளிபாளையத்தில் இயங்கும் ஆலை என்பது தெரிய வந்ததால் அந்த ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 
இதுபோன்று நீர்நிலைகளில் சாயக்கழிவை கலக்க விடுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments