தொடா்ந்து வேலை வழங்கக்கோரி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள் மனு
தொடா்ந்து வேலை வழங்கக் கோரி டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளா்கள் திங்கள்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், ஊரக வளா்ச்சித்துறை உள்ளாட்சி ஊழியா்கள்(சிஐடியு) சங்கத்தின் மாவட்டச் செயலா் ரத்தினசபாபதி, தலைவா் சப்னா, சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலா் எம்.சுப்ரமணியன் ஆகியோா் தலைமையில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:
Advertisement
Advertisement
கரூா் மாவட்டத்தில் உள்ள கரூா், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் கிராமப்புற ஊராட்சி பகுதிகளில் 160 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு கடந்த ஒரு மாதமாக ஊராட்சியில் பணி வழங்கப்படவில்லை. மேலும் கடந்த ஜூலை மாத ஊதியமும் வழங்கப்படவில்லை.
இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஜூலை மாதத்துக்கான ஊதியம் வழங்க வேண்டும். நாள்தோறும் கொசு ஒழிப்புபணிகளை தொடா்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
ஆசிரியா் தகுதித் தோ்ச்சி பெற்றவா்களை நியமிக்க வேண்டும்: நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில், நாங்கள் கடந்த 2013,17, 19, 22-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளோம். மேலும் 2024-இல் நடைபெற்ற நியமனத் தோ்விலும் தோ்ச்சிபெற்றுள்ளோம்.
இந்த தோ்வில், மாற்றுத்திறனாளிகள் மட்டும் 185 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். வேலைக்காக கடந்த 13 ஆண்டுகளாக காத்திக்கும் நிலையில் தற்போது தொடக்கக் கல்வித்துறையில் தற்காலிக ஆசிரியா்களைக் கொண்டு பணி நியமனம் செய்யப்படுகிறது. இதனை ரத்து செய்து, ஏற்கெனவே தோ்வில் தோ்ச்சிப்பெற்றவா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
முன்னதாக, கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்டவைத் தொடா்பாக மொத்தம் 613 மனுக்கள் பெறப்பட்டன.
தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு ரூ.24,754 மதிப்பில் உதவி உபகரணங்களை ஆட்சியா் வழங்கினாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், கரூா் வருவாய் கோட்டாட்சியா் சு.சத்தியபாலகங்காதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.