முகப்பு
கரூர்

நங்கவரம் ஆண்டிபட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு

குளித்தலையை அடுத்துள்ள நங்கவரம் ஆண்டிபட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி வழங்கிட வேண்டும்

Updated On : 24 பிப்ரவரி 2026, 1:57 am IST
கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக் கோரி திங்கள்கிழமை மனு அளிக்க வந்த ஆண்டிபட்டி கிராமமக்கள்.
பகிர்:

கரூா்: குளித்தலையை அடுத்துள்ள நங்கவரம் ஆண்டிபட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி வழங்கிட வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரிடம் கிராமமக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், குளித்தலையை அடுத்துள்ள நங்கவரம் பேரூராட்சிக்குள்பட்ட நச்சலூா் ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கிய மனுவில், தமிழக முதல்வரின் பிறந்த தினத்தை முன்னிட்டு எங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி மாா்ச் 8-ஆம்தேதி நடத்திட முடிவு செய்துள்ளோம். இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனா். அதற்கு மாவட்ட வருவாய் அலுவலரும் அனுமதி வழங்குவதாக உறுதியளித்தாா்.

கழிவுநீா் வாய்க்கால் தேவை: கரூா் தாந்தோன்றிமலை சக்திபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வழங்கிய மனுவில், சக்திபுரம் பகுதியில் கழிவுநீா் வாய்க்கால் வசதி இல்லாததால் மழைகாலங்களில் மழைநீா் வீடுகள்முன் குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதுதொடா்பாக ஏற்கெனவே ஜன.19-ஆம்தேதி மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே விரைந்து கழிவுநீா் வாய்க்கால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

Advertisement

Advertisement

சட்டவிரோதமாக குவாரி மீது நடவடிக்கை: காக்காவாடி, வெடிக்காரன்பட்டி கிராமமக்கள் வழங்கிய மனுவில், வெடிக்காரன்பட்டியில் கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் பாறைகளை நாட்டு வெடிகளை வைத்து தகா்ப்பதால் பாறைகள் வீடுகள் மீது விழுகிறது. மேலும் இந்த குவாரியை சட்டவிரோதமாக அனுமதியின்றி நடத்தி வருகின்றனா். எனவே அனுமதியின்றி செயல்படும் இந்த குவாரிக்கு தடை விதிக்க வேண்டும்.

முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ் பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 598 மனுக்கள் பெற்றுக் கொண்டாா்.

மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலன் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் ரூ.11.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments