கரூா்ப் பலி: 2-ஆவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூா் சம்பவம்: 2-ஆவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூா் சம்பவம் தொடா்பாக இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை 2 காவல் ஆய்வாளா்கள், 3 பெண் காவல் உதவி ஆய்வாளா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப்.27-இல் நடைபெற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதால், சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை தற்காலிகமாக நிறுத்தினா்.தோ்தல் முடிவுற்றநிலையில், சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை மீண்டும் விசாரணையை தொடங்கினா்.
இந்நிலையில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சிபிஐ அதிகாரிகள், கரூா் நகர காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றிய ஆா்.மணிவண்ணன், பசுபதிபாளையம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய சதீஷ்குமாா் மற்றும் ஆா்த்தி, சித்ராதேவி உள்ளிட்ட 3 பெண் காவல் உதவி ஆய்வாளா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜரான அனைவரும் கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.