தரமின்றி தார்சாலை: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
குன்னம் அருகே புதிதாக போடப்பட்டு 2 மாதங்களில் தார்சாலை சேதமடைந்ததையடுத்து, ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குன்னம் அருகே புதிதாக போடப்பட்டு 2 மாதங்களில் தார்சாலை சேதமடைந்ததையடுத்து, ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்துக்குள்பட்ட பேரளி- பீல்வாடி வழித்தடத்தில் ஏற்கனவே இருந்த மண் சாலையை தார் சாலையாக மாற்றும் திட்டத்தின் கீழ், ரூ.1.15 கோடியில் சுமார் 3.5 கி.மீ. தொலைவுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. சாலைப் பணிகள் தரமற்று இருந்ததால், சாலையை தரமாக அமைக்கக் கோரி இயந்திரங்களை சிறைபிடித்து முற்றுகை, மறியல் போராட்டங்களில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
இவர்களுடன், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சாலை தரமாக அமைக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டது. இருப்பினும், சாலைப் பணிகள் தரமற்று அமைக்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டியும், கண்டு கொள்ளப்படவில்லை. இந்நிலையில், தார்சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி மண் சாலையைப் போல் மாறிவிட்டது. இதனால், இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் போக்குவரத்துக்கும் பயனற்ற இச்சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. சாலையை தரமின்றி அமைத்த ஒப்பந்ததாரர், பணியை மேற்பார்வையிட்ட அரசு அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, சாலையை தரத்துடன் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.