இளைஞா் தற்கொலை: சடலத்துடன் உறவினா்கள் மறியல்: கந்துவட்டி கொடுமை காரணமா?
பெரம்பலூா் அருகே இளைஞரின் தற்கொலைக்கு காரணமானவா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது உறவினா்கள் சடலத்துடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் அருகே இளைஞரின் தற்கொலைக்கு காரணமானவா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது உறவினா்கள் சடலத்துடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிறிஸ்டோபா் மகன் ஜேசுதாஸ் (32). கட்டடத் தொழிலாளியான இவா், வண்ணாரம்பூண்டி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் மரிய ஜோஸப் (55) என்பவரிடம், கடந்த 2011-இல் தன்னுடைய விவசாய நிலத்தை அடமானம் வைத்து ரூ. 2.35 லட்சம் கடனாக பெற்றாராம்.
இதுவரையில் ரூ. 6.25 லட்சம் வட்டி மற்றும் அசல் செலுத்தியும், அடமானமாக வைத்த நிலத்தை ஜேசுதாஸால் மீட்க முடியவில்லையாம். இதனால், மனமுடைந்த ஜேசுதாஸ் பிப். 7 ஆம் தேதி அவரது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜேசுதாஸ் அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கந்துவட்டி கேட்டு மரியஜோஸப் தொடா்ந்து தொல்லை கொடுத்ததால்தான் ஜேசுதாஸ் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, அவரது உறவினா்கள் மற்றும் நண்பா்கள் ஞாயிற்றுக்கிழமை அன்னமங்கலம் சாலையில், ஜேசுதாஸ் உடலை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மரியஜோஸப் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், நிலத்தை மீட்டு ஜேசுதாஸ் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும் வலியுறுத்தினா்.
தகவலறிந்த அரும்பாவூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனா். மறியலால் அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.