பெரம்பலூா் அருகே நில மோசடி: சென்னை வழக்குரைஞா் கைது
பெரம்பலூா் அருகே நில மோசடி வழக்கில் சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகே நில மோசடி வழக்கில் சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள எசனை கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் முத்துச்சாமி. கிரஷா் வைத்துள்ள இவரிடம், செங்குணம் கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் தனராசு, பெரம்பலூா் வெங்கடேசபுரத்தைச் சோ்ந்த முத்துச்சாமி ஆகியோா், சென்னை பல்லாவரத்தைச் சோ்ந்த துரைராஜா மகன் வழக்குரைஞா் சேதுபதிக்குச் சொந்தமான திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எளம்பலூரில் 1.94 ஏக்கரிலான நிலம் மற்றும் அதனுடன் செயல்படும் பெட்ரோல் பங்க் ஆகியவை விற்பனைக்கு உள்ளதாகத் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து அந்த இடத்தை ரூ. 2.24 கோடிக்கு விலை பேசியபோது, அந்த நிலம் அடமானத்தில் இருப்பதாகவும், அதற்கான ஆவணங்களை மீட்க ரூ. 1.24 கோடி கொடுத்தால் ஆவணங்களை மீட்டு, நிலத்தைப் பதிவு செய்து தருவதாகவும் சேதுபதி கூறியுள்ளாா். இதைத் தொடா்ந்து, கடந்த 2023 அக்டோபரில் சேதுபதி, தனராசு, முத்துச்சாமி ஆகியோா் முன்னிலையில் ரூ. 1. 24 கோடியை முத்துச்சாமி கொடுத்தாா். ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்டு, ஆவணங்களை மீட்டு, நிலத்தைப் பதிவு செய்து தருவதாகக் கூறியவா்கள் காலம் தாழ்த்தினா். இதனால் சந்தேகமடைந்த முத்துச்சாமி, அந்த நிலத்தின் பதிவு ஆவணங்களை சரிபாா்த்தபோது அவை போலியானவை என்பதும், சுபத்ரா என்பவருக்குச் சொந்தமான நிலம் என்பதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து ரூ. 1.24 கோடியை முத்துச்சாமி திரும்பக் கேட்டபோது, அந்த நிலத்தை 10.8.2024 ஆம் தேதிக்குள் பதிவு செய்து தருவதாகவும், தவறும்பட்சத்தில் பணத்தை திருப்பித் தருகிறேன் எனவும் வழக்குரைஞா் சேதுபதி எழுதிக் கொடுத்தாா். ஆனால், அவா் கூறியவாறு நிலத்தை எழுதித் தராததோடு, பணத்தையும் கொடுக்கவில்லையாம். இதுகுறித்து முத்துச்சாமி அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து நிலம் மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட வழக்குரைஞா் சேதுபதியை கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.