தஞ்சையில் கல்லால் அடித்து முதியவர் கொலை: இளைஞர் கைது
தஞ்சாவூரில் முதியவரை கல்லால் அடித்துக் கொன்றதாக இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தஞ்சாவூரில் முதியவரை கல்லால் அடித்துக் கொன்றதாக இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி மிஷன் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சி. சுப்பிரமணியன் (70). இவர் இரவு நேரத்தில் அருகில் காலியாக உள்ள பொதுப் பணித் துறைப் பழைய குடியிருப்பு வளாகத்தில்ல் படுத்து தூங்குவது வழக்கம். இதேபோல, அங்கு செவ்வாய்க்கிழமை இரவு தூங்குவதற்காகச் சென்ற இவர் புதன்கிழமை காலை தலை, காதில் ரத்தம் வடிந்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே, கிழக்குக் காவல் நிலையத்தில் சரணடைந்த ராஜ்குமாரிடம் (40) போலீஸார் விசாரித்தனர். இதில், ராஜ்குமார் 2011 ஆம் ஆண்டு வரை மகர்நோன்புசாவடி ரெசிடென்சி பங்களா தெருவில் வசித்து வந்தார். அதன் பிறகு தனது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள ஜமீன் நல்லமங்கலம் கிராமத்துக்குக் குடிபெயர்ந்தார். அதற்கு முன்பு, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக இவர் மீது மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இதற்காக தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த இவர் இரவில் படுப்பதற்காகப் பொதுப் பணித் துறைப் பழைய குடியிருப்பு வளாகத்துக்குச் சென்றார். அறிமுகம் இல்லாத இவரிடம் சுப்பிரமணியன் யார் எனக் கேட்டார். அப்போது, ஏற்பட்ட தகராறில் சுப்பிரமணியனை ராஜ்குமார் கொலை செய்தார் என்பது தெரிய வந்தது என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, ராஜ்குமாரை போலீஸார் கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.