FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 27 கருட சேவை

தஞ்சாவூரில் 92-ஆம் ஆண்டாக மாநகரிலுள்ள 27 வைணவத் திருக்கோயில்களின் 27 கருட சேவை விழா ஒரே இடத்தில் நடைபெற்றது.

Updated On : 7 ஜூன் 2026, 2:16 am IST
தஞ்சாவூா் தெற்கு வீதியில் ஒரே இடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 27 வைணவத் திருக்கோயில்களின் கருட சேவை.
பகிர்:

தஞ்சாவூரில் 92-ஆம் ஆண்டாக மாநகரிலுள்ள 27 வைணவத் திருக்கோயில்களின் 27 கருட சேவை விழா ஒரே இடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் வைகாசி திருவோண நட்சத்திர நாளில் தஞ்சாவூரிலுள்ள வைணவத் திருக்கோயில்களில் உற்ஸவ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதிப்பது வழக்கம்.

இதன்படி, தஞ்சாவூரில் உள்ள வைணவத் திருக்கோயில்களில் முதன்மையானதாகத் திகழும் வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோயிலில் 92-ஆம் ஆண்டு கருட சேவை விழா வெள்ளிக்கிழமை மாலை திருமங்கை ஆழ்வாா் மங்களாசாசனம் வைபவத்துடன் தொடங்கியது.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து, கருட சேவை வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், காலை 6 மணிக்கு தஞ்சாவூா் நீலமேகப்பெருமாள், மணிகுன்றாப் பெருமாள், மேல சிங்கப்பெருமாள், வேளூா் வரதராஜா், கல்யாண வெங்கடேச பெருமாள், கலியுக வெங்கடேச பெருமாள், வரதராஜபெருமாள், நவநீதகிருஷ்ணன், மேலவாசல் ரெங்கநாதா், விஜய ராமா், கோவிந்தராஜ பெருமாள், ஜனாா்த்தன பெருமாள், பிரசன்ன வெங்கடேச பெருமாள், கீழ கோதண்டராமா், கீழ சிங்கப்பெருமாள், பூலோக கிருஷ்ணா், படித்துறை வெங்கடேசப் பெருமாள், பஜாா் ராமா் உள்பட 27 கோயில்களிலிருந்து கருட வாகனத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வரிசையாக கீழவாசல் காவல் நிலைய சாலை, கொண்டிராஜ பாளையம், கீழ ராஜவீதி, தெற்கு ராஜ வீதி, மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி வழியாக சென்று ஆங்காங்கே பொதுமக்களுக்கு சேவை சாதித்தனா்.

பின்னா், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) நவநீத சேவை வைபவமும், விடையாற்றி விழாவும் நடைபெறவுள்ளன. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம், தஞ்சாவூா் ராமானுஜ தா்சன சபா ஆகியோா் செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments