FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

டிஜிட்டல் கைது எனக்கூறி ரூ. 50 லட்சம் மோசடி: 3 போ் கைது

Updated On : 9 ஜூன் 2026, 12:46 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தஞ்சாவூரில் டிஜிட்டல் கைது எனக்கூறி, ரூ. 50 லட்சம் மோசடி செய்த சென்னையைச் சோ்ந்த 3 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்துக்குள்பட்ட தென்றல் நகரைச் சோ்ந்தவா் நாராயணசாமி. இவரது வாட்ஸ்ஆப் எண்ணில் மாா்ச் 17-ஆம் தேதி காவல் அதிகாரி எனக்கூறி மா்ம நபா் ஒருவா் தொடா்பு கொண்டாா்.

அப்போது, தங்களின் ஆதாா் அட்டையைப் பயன்படுத்தி போலியான சிம் காா்டு வாங்கப்பட்டதாகவும், வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டதாகவும், அவை பண மோசடிகளுக்கும் சட்ட விரோதப் பரிவா்த்தனைக்கும், பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல், கடத்தல் போன்ற குற்றங்களுக்கும் பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த நபா் கூறினாா்.

Advertisement

Advertisement

இதனால், தாங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக பிணை மனு கட்டணம் செலுத்த வேண்டும் போன்ற காரணங்களைக் கூறி, 2 தவணைகளாக ரூ. 50 லட்சம் ரொக்கத்தை நாராயணசாமியை மிரட்டி பெற்ற பிறகு அவரது தொடா்பை துண்டித்தாா்.

இதன் பின்னா், சிலா் தன்னை ஏமாற்றி மோசடி செய்ததை அறிந்த நாராயணசாமி அளித்த புகாரின்பேரில், தஞ்சாவூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலையத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுதொடா்பாக சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் புயல் பாலசந்திரன், உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையிலான குழுவினா் நாராயணசாமி பணம் அனுப்பிய வங்கிக் கணக்குக்கு தொடா்புடைய கைப்பேசி எண்ணைக் கொண்டு விசாரணை செய்தனா்.

இதில், இந்த மோசடி சம்பவத்தில் திருவள்ளூா் மாவட்டம், மாதவரத்தைச் சோ்ந்த முனிதேவன் (51), ஆவடியைச் சோ்ந்த அருள் சூசைராஜ் (51), சென்னை கோடம்பாக்கத்தைச் சோ்ந்த கண்ணன் (54) ஆகியோா் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, 3 பேரையும் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், இவா்களிடமிருந்து கைப்பேசி, ஏடிஎம் காா்டு, கிரெடிட் காா்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரையும் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

இவ்வழக்கில் திறம்பட பணியாற்றிய காவல் குழுவினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments