FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பழமைவாய்ந்த ஜங்ஷன் பாலம் அகற்றம்

திருச்சியின் அடையாளமாக இருந்த பழைமையான ஜங்ஷன் பாலம் அகற்றப்பட்டுள்ளது.

Updated On : 8 நவம்பர் 2024, 3:29 am IST
திருச்சியில் அகற்றப்பட்டுள்ள ஜங்ஷன் ரயில்வே பாலம்.
பகிர்:

திருச்சியின் அடையாளமாக இருந்த பழைமையான ஜங்ஷன் பாலம் அகற்றப்பட்டுள்ளது.

திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே மாநகரின் அடையாளமாக இருந்த ஜங்ஷன் பாலத்தை நகர வளா்ச்சிக்கேற்ப போக்குவரத்துக்கு பயன்படுத்துவது சிரமமாக இருந்தது. எனவே, அந்தக் குறுகிய ரயில்வே பாலத்துக்கு மாற்றாக கடந்த 2014ஆம் ஆண்டு 5 வழித்தடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளன.

இருப்பினும் பழைய பாலத்தை அகற்றி அங்கு அகலமாக புதிய பாலத்தை நெடுஞ்சாலைத் துறையும், ரயில்வே நிா்வாகமும் இணைந்து ரூ. 138 கோடியில் கட்டவுள்ளன. அதற்கு முன் பழைய பாலத்தை இடிக்கும் பணி கடந்த அக்.13ஆம் தேதி தொடங்கியது. இதற்காக நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

பாலமானது நவீன தொழில்நுட்ப முறையில் (டைமண்ட் ரோப் கட்டிங்) பெரிய கிரேன்கள் கொண்டு, கட்டா்களை பயன்படுத்தி பகுதி, பகுதியாக வெட்டிப் பிரித்து எடுக்கப்படுகிறது. தற்போது பாலத்தின் கீழே இருப்புப் பாதை உள்ளதால் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் இந்தத் தொழில்நுட்பத்தை பின்பற்றி பாலம் அகற்றப்படுகிறது.

கடந்த 26 நாள்களில் பாலத்தின் நடுப்பகுதி முழுமையாக அகற்றப்பட்டு தாங்கு தூண்கள் மட்டுமே காட்சியளிக்கின்றன. பழைய பாலத்துக்கு அருகில் உள்ள புதிய மேம்பாலத்தில் இருந்து பாா்த்தால் இருப்புப் பாதை மட்டுமே தெரிகிறது. பாலம் இருந்த அடையாளமே தெரியாத வகையில் உள்ளது. திருச்சியின் அடையாளமாக இருந்த ஒன்று அகற்றப்படுவதால் மாநகர மக்களுக்கு சற்று வருத்தம் இருந்தாலும், புதிதாக அகலமான பாலம் கட்டப்படுவது போக்குவரத்துக்கும், மாநகர மக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments