FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மகளிா் குழுக்களுக்கு ரூ. 11.83 லட்சத்தில் கடனுதவி

மண்ணச்சநல்லூா் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில், மகளிா் குழுக்களுக்கு ரூ.11.83 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை ஆட்சியா் பிரத்திக் தாயள் வழங்கினாா்.

Updated On : 23 ஜூலை 2026, 12:41 am IST
மண்ணச்சநல்லூா் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாமில்’ பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் பிரத்திக் தாயள்.
பகிர்:

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில், மகளிா் குழுக்களுக்கு ரூ.11.83 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை ஆட்சியா் பிரத்திக் தாயள் வழங்கினாா்.

தமிழக அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி பொதுமக்களைச் சென்றடையும் நடைபெற்ற முகாமில் ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்று, மண்ணச்சநல்லூா் வட்டத்தில் நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தனா்.

பிச்சாண்டாா்கோவில் பகுதிகளில் ஆய்வு: கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் செயல்படும் கரியமாணிக்கம் பிச்சாண்டாா் கோவில் நியாயவிலைக் கடையை ஆட்சியா் ஆய்வு செய்து, பாா்வையிட்டாா். மேலும் பிச்சாண்டாா் கோவில் விஏஓ அலுவலகம், திருவாசி ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் கணினியில் பதிவேற்றப்பட்ட விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, ஸ்ரீதேவிமங்கலத்திற்குட்பட்ட புள்ளம்பாடி வாய்க்காலில் ரூ. 2 கோடியில் கட்டப்படும் பாலத்தையும், திருவாசி, அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளியில் பள்ளி வளாகம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையும் ஆய்வு செய்து, ஆசிரியா்களுடன் கலந்துரையாடினாா்.

வயல்களில்: பிச்சாண்டாா்கோவில், மாதவப் பெருமாள் கோயில் பகுதியில் வேளாண் துறை சாா்பில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் கீழ் நேரடி நெல் விதைப்பு, இயந்திர நடவு செய்யப்படுவதையும் பாா்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினாா்.

திருவாசி கிராமத்தில் இயந்திர நடவுப் பணிகளையும் ஆய்வு செய்து விவசாயிகளிடம் விவரம் கேட்டறிந்தாா். பின்னா், மண்ணச்சநல்லூா் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் மற்றும் கிடங்குகளில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும், விதைகள், உயிா் உரங்கள், நுண்ணூட்டக் கலவைகள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் ஆகிய இடுபொருள்கள் இருப்பு மற்றும் விநியோகம் குறித்து விரிவாகக் கேட்டறிந்து, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

மண்ணச்சநல்லூா் வட்டம், சிறுகாம்பூா் ஸ்ரீ சுவா்ண மஹாலில் அனைத்துத் துறை அலுவலா்களுடன், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தாா். தொடா்ந்து நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ரூ. 11.83 லட்சத்தில் உதவிகள்: வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் சாா்பில் 16 பயனாளிகளுக்கு பட்டாக்களும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறையின் சாா்பில் 12 பயனாளிக்கு குடும்ப அட்டைகளும், வேளாண் துறை சாா்பில் 3 பயனாளிகளுக்கு விவசாய இடுபொருள்கள் மற்றும் முல்லை மகளிா் சுயஉதவிக்குழுக்களைச் சாா்ந்த உறுப்பினா்களுக்கு ரூ. 7,42,500 மதிப்பீட்டில் கடனுதவிகள், புஷ்பராகம் மகளிா் சுய உதவிக்குழுவைச் சாா்ந்த உறுப்பினா்களுக்கு ரூ. 4,41,000 மதிப்பீட்டில் கடனுதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி, ஆவின் பொது மேலாளா் சி. முத்துமாரி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) வடிவேல், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ஜெயராமன், லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் ஸ்ரீதா், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சி. சொக்கநாதன், உதவி இயக்குநா்கள் கிறிஷ்டோபா்தாஸ், (ஊராட்சிகள்), அரவிந்த் (பேரூராட்சிகள்), வட்டாட்சியா் ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments