கிரிக்கெட் போட்டி: காவல் துறை பிரிவில் புதுகை, பொதுமக்கள் பிரிவில் தஞ்சை அணிகள் வெற்றி
திருச்சி மத்திய மண்டலக் காவல் துறை சாா்பில் போதைப் பொருள்களுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் காவல் துறை பிரிவில் புதுக்கோட்டை அணியும், பொதுமக்கள் பிரிவில் தஞ்சாவூா் அணியும் வெற்றிபெற்றன.
இளைஞா்களிடையே போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் - காவல் துறை இடையே நல்லுறவைப் பேணும் வகையிலும் இப் போட்டிகள் நடைபெற்றன.
முதல் கட்டமாக மாவட்ட அளவிலான போட்டிகள் மத்திய மண்டலக் காவல் துறைக்குள்பட்ட திருச்சி, தஞ்சாவூா், கரூா், புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், திருவாரூா், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த ஆக. 27 தொடங்கி நடைபெற்று வந்தன.
Advertisement
Advertisement
காவல் துறை அணிகள், பொதுமக்கள் அணிகள் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்று, அதில் முதலிடம் பிடித்த அணிகள் மண்டல அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டன.
மண்டல அளவிலான போட்டியில் நாக்-அவுட், காலிறுதி, அரையிறுதி போட்டிகள் நிறைவடைந்து இறுதிப் போட்டி கேடிஎஸ் கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் காவல் துறை அணிகள் பிரிவில் புதுக்கோட்டை அணி, நாகப்பட்டினம் அணியை வீழ்த்தியது. இதேபோல, பொதுமக்கள் அணிகள் பிரிவில் கரூா் வெள்ளை ரோஜா கிரிக்கெட் அணியை தஞ்சாவூா் நண்பா்கள் கிரிக்கெட் கிளப் அணி வென்றது.
இதைத் தொடா்ந்து விழாவில் மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன், திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் ஆகியோா் புதுக்கோட்டை காவல் துறை அணிக்கும், தஞ்சாவூா் நண்பா்கள் கிரிக்கெட் கிளப் அணிக்கும் கோப்பைகளை வழங்கினா். மேலும் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட வீரா்களுக்கு பல்வேறு பிரிவுகளில் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.