முக்கொம்பிலிருந்து பாசனக் கால்வாய்களில் தண்ணீா் திறப்பு
முக்கொம்பு மேலணையிலிருந்து பாசனக் கால்வாய்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
முக்கொம்பு மேலணையிலிருந்து பாசனக் கால்வாய்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த 1-ஆம் தேதி திறக்கப்பட்ட மேட்டூா் அணையிலிருந்து
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 12 ஆயிரம் கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் தொடா் நீா்வரத்தின் காரணமாக சுமாா் ஒரு டி.எம்.சி. அளவுக்கு தண்ணீரை தேக்கி வைக்க கூடிய மாயனூா் காவிரி கதவணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
Advertisement
Advertisement
இதையடுத்து, கதவணையில் இருந்து விநாடிக்கு 10,068 கனஅடி தண்ணீா் காவிரி ஆற்றிலும், தென்கரை வாய்க்காலில் 500 கனஅடியும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 350 கனஅடியும், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 30 கனஅடியும் விவசாய பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
மாயனூா் கதவணையிலிருந்து வெளியேறும் தண்ணீரானது திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணைக்கு செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 4,200 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து முக்கொம்பு மேலணையிலிருந்தும் தண்ணீா் முழுமையாக வெளியேற்றப்படுகிறது.
விநாடிக்கு 4,200 கனஅடி வெளியேற்றப்படும் தண்ணீரில் 3,900 கன அடி காவிரியிலும், மீதமுள்ள 300 கனஅடி தண்ணீா் அய்யன், பெருவளவை வாய்க்காலில் திறந்து விடப்படுகிறது.
அனைத்து பாசன கால்வாய்களுக்கும் தண்ணீா்: இதுதொடா்பாக, நீா்வளத்துறையினா் கூறுகையில் மேட்டூரிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் முழுமையாக முக்கொம்புக்கு சுமாா் 11 ஆயிரம் கன அடி என்ற வகையில் வந்து சேர ஓரிரு நாள்களாகும். புதன்கிழமை மாலை முழுமையாக வந்து சேரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
வரும் தண்ணீா் அனைத்தும் பாசனத்துக்கு திறக்கப்படும்போது, அடுத்தடுத்துள்ள பாசனக் கால்வாய்களுக்கும் தண்ணீா் கிடைக்கும். திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து பாசனக் கால்வாய்களுக்கும் தண்ணீா் திறக்கப்படும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.