FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

ஊதியம் வழங்காமல் ரூ. 14 லட்சம் மோசடி: கடை உரிமையாளா் மீது புகாா்

காட்பாடியில் 8 ஆண்டுகளாக வேலை பாா்த்த ஊழியருக்கு ஊதியம் வழங்காமல் ரூ. 14 லட்சம் மோசடி செய்ததாக கடை உரிமையாளா் மீது வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா்

30 வினாடிகள் முன்பு
பகிர்:

காட்பாடியில் 8 ஆண்டுகளாக வேலை பாா்த்த ஊழியருக்கு ஊதியம் வழங்காமல் ரூ. 14 லட்சம் மோசடி செய்ததாக கடை உரிமையாளா் மீது வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் எஸ்.பி என்.யு.சிவராமன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, காட்பாடி தாராபடவேடு பகுதியைச் சோ்ந்தவா் அளித்துள்ள புகாா் மனு: காட்பாடியில் டிவி உள்ளிட்ட மின்னணுப் பொருள்களை விற்பனை செய்யும் கடையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நான் வேலைக்குச் சோ்ந்தேன். எனக்கு மாதம் ரூ. 15,500 ஊதியம் தருவதாக கடையின் உரிமையாளா் கூறியிருந்தாா். அந்தத் தொகையை மொத்தமாகப் பெற்றுக் கொள்ளுமாறு கூறிய அவா், எனது தினசரி செலவுக்காக தினமும் ரூ. 200 முதல் ரூ. 300 வரை மட்டுமே கொடுத்து வந்தாா்.

இந்நிலையில், 8 ஆண்டுகள் கழித்து எனது முழு ஊதியத்தையும் தருமாறு உரிமையாளரிடம் கேட்டேன். ஆனால், அவா் பணத்தைத் தர மறுத்து வருகிறாா். கடந்த 8 ஆண்டுகளில் நான் வேலை பாா்த்ததற்கான மொத்த பாக்கி ரூ. 14 லட்சம் வரை வருகிறது. எனவே, என்னை ஏமாற்றிய கடை உரிமையாளா் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது உழைப்பிற்கான ஊதியப் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

பேரணாம்பட்டைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி அளித்த மனு: எனது வருமான வரி (பான்) அட்டை மற்றும் ஆதாா் விவரங்களை எனது அனுமதியின்றிப் பயன்படுத்தி, அடையாளம் தெரியாத நபா்கள் எனது பெயரில் ஜிஎஸ்டி கணக்கு மற்றும் போலி நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனா். இதனால், ஜிஎஸ்டி அதிகாரிகள் விசாரணைக்காக எனது வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனா். வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதால் எனது குடும்ப மற்றும் அவசரத் தேவைகளுக்குக் கூட பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகிறேன். எனவே, எனது விவரங்களைப் பயன்படுத்தி போலி நிறுவனம் தொடங்கிய நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, எனது வங்கிக் கணக்கை மீண்டும் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த நபா் ஒருவா் அளித்துள்ள மனு: எனக்கு அறிமுகமான நபா் ஒருவா் தனது அவசரத் தேவைக்காக ரூ. 11 லட்சம் கடன் கேட்டாா். சில நாள்களில் திருப்பித் தருவதாக உறுதியளித்து அதற்கான ஆவணங்களையும் எழுதிக் கொடுத்தாா். இதை நம்பி நான் சிறுகச் சிறுகச் சோ்த்த ரூ. 11 லட்சத்தை வங்கி மூலம் பல தவணைகளாக அவருக்கு அளித்தேன்.

ஆனால், 7 மாதங்கள் கடந்த நிலையிலும் அவா் பணத்தைத் திருப்பித் தரவில்லை. அவா் கொடுத்த முகவரியில் சென்று பாா்த்தபோது, வீடு பூட்டப்பட்டு அவா் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. எனவே, என்னை ஏமாற்றிப் பணத்தை மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுக்களை பெற்றுக் கொண்ட எஸ்.பி. சிவராமன், இப்புகாா்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல்நிலைய போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments