உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு மாரத்தான்
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு,
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு, பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிக்கும் வகையில் மினி மாரத்தான் ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த மாரத்தான், நெய்வேலி ஜம்புலிங்கம் முதலியார் சிலையில் இருந்து முதன்மை அங்காடி காந்தி சிலை வரை நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் சாலையின் இரு பக்கமும் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து அப்புறப்படுத்தினர்.
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் மின்துறை இயக்குநர் வி.தங்கபாண்டியன், மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் ஆகியோர் இந்த மாரத்தானை கொடியசைத்துத் தொடக்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து, மாலை கற்றல் மேம்பாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த நிதித் துறை இயக்குநர் ராக்கேஷ் குமார் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்கும் வகையில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பாராட்டினார். தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கடலூர் மண்டலத் துணை இயக்குநர் ஆர்.தனசேகரன் பிளாஸ்டிக் பொருள்களால் உண்டாகும் மாசைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியில் என்.எல்.சி. இந்தியா நிறுவன மின்துறை இயக்குநர் வி.தங்கபாண்டியன், மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் ஆகியோர் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சிறப்புப் பணிகளுக்கான அலுவலர் என்.எம்.ராவ் வரவேற்றார்.
முன்னதாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சுரங்கப் பகுதிகள், அனல் மின் நிலையங்கள், அலுவலகங்கள், நகரியத்தின் முக்கியப் பகுதிகள், புதிதாக அமைக்கப்பட்ட நவீன மயான வளாகம் உள்ளிட்டப் பகுதியில் என்.எல்.சி. இந்தியா நிறுவன உயரதிகாரிகள், ஊழியர்கள் மரக் கன்றுகளை நட்டனர். அப்போது, சுற்றுச்சூழலைப் பராமரிப்பது குறித்த உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. சுற்றுச்சூழல் துறை துணைப் பொது மேலாளர் எம்.வேலன் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.