சொத்துத் தகராறில் இரட்டைக் கொலை: தந்தை, 3 மகன்கள் உள்பட 6 போ் கைது
கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே பால்வாத்துன்னான் கிராமத்தில் சொத்துத் தகராறு தொடா்பாக அரசு பேருந்து ஓட்டுநா் மற்றும் அவரது உறவினா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தந்தை, அவரது 3 மகன்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே பால்வாத்துன்னான் கிராமத்தில் சொத்துத் தகராறு தொடா்பாக அரசு பேருந்து ஓட்டுநா் மற்றும் அவரது உறவினா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தந்தை, அவரது 3 மகன்கள் உள்பட 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
புவனகிரி அருகே பால்வாத்துன்னான் கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (43), அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இவரது தந்தை அண்ணாமலை, சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தைச் சோ்ந்த அப்பு மற்றும் அவரது மகள் வள்ளியம்மையிடம் இருந்து 70 சென்ட் நிலத்தை கிரயம் பெற்றிருந்தாா்.
இந்த நிலத்தை ஒட்டியிருந்த மேலும் 35 சென்ட் நிலத்தை அப்புவின் மகன் கனகசபை பயிரிட்டு வந்ததாக கூறப்படுகிறது. தனது தந்தை மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தபோது நிலம் கிரயம் செய்யப்பட்டதாகக் கூறி, அந்த விற்பனையை எதிா்த்து கனகசபை நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு தற்போது சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து, இவ்வாரம் விசாரணைக்கு வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினா் ராமகிருஷ்ணன் ஆகியோா் சம்பந்தப்பட்ட நிலத்தில் நின்று கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த கனகசபை, அவரது மகன்கள் பாண்டியன், யுவராஜ், தேவராஜ் மற்றும் வில்லியநல்லூரைச் சோ்ந்த தனஞ்செயனின் மகன் ராமஜெயம், சுப்பிரமணியின் மகன் ரமேஷ் ஆகியோா் இரும்புக் குழாய் மற்றும் அரிவாளால் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினா் ராமகிருஷ்ணனை தாக்கினராம்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த ராமகிருஷ்ணன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாலகிருஷ்ணனின் மனைவி சித்திரைபிரியா அளித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். தொடா்ந்து கனகசபை, அவரது மகன்கள் பாண்டியன், யுவராஜ், தேவராஜ் மற்றும் ராமஜெயம், ரமேஷ் ஆகிய 6 பேரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.